மாதங்கி இளங்கோவன்
நேரடியாக நேற்றைய எஃப்1 கார் பந்தயத்தைப் பார்த்த ரசிகர்களுள் முன்னாள் உள்ளூர் ஃபார்முலா ஓட்டுநரான சூரியா பாலகிருஷ்ணனும் ஒருவராவார். ஒரு காலத்தில் எஃப்1 பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தார் அவர். ஆனால் 12 ஆண்டுகளுக்குமுன் தம் பந்தய நாள்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தேசிய சேவைக்கு அவர் சென்றதை அடுத்து பந்தயங்களில் போட்டியிடுவதில் ஓர் இடைவெளி ஏற்பட்டது. அத்துடன் போதுமான நிதி ஆதரவாளர்கள் இல்லாத காரணத்தாலும் அவரது கனவுப் பயணம் பாதியிலேயே நின்றுபோனது.
தம்மைப் போன்ற ஃபார்முலா பந்தய ஓட்டுநர்களுக்கு வழிகாட்டவும் நிதி ஆதரவளிக்கவும் அமைப்புகள் அல்லது நபர்கள் இருந்திருந்தால் அவரது கனவு நனவாகி இருக்க வாய்ப்புண்டு என்றார் சூரியா.
தாமான் ஜூரோங் வட்டாரத்தில் இருந்த 'ஃபன் கார்ட்டிங்' பந்தயத் தடங்களில் சிறு வயதுமுதல் ஆரம்பித்த இவரது பயணம், ஆசிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்த பல்வேறு ஃபார்முலா பந்தயங்களுக்கு அவரைக் கொண்டு சேர்த்தது.
ஒரு மணி நேரத்துக்கு 'ஃபன் கார்ட்டிங்' செய்வதற்கே $60 செலவிட வேண்டும். அத்துடன் ஃபார்முலா ஒன்று பந்தயங்களில் ஈடுபடுவதற்குத் தேவையான ஆடை, பொருள்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு ஆயிரக்கணக்கில் அவர் பெற்றோர் செலவிட்டனர்.
ஒரு கட்டத்தில் தமக்கு ஏற்ற தலைக்கவசம் வாங்க முடியாமல் தமக்கெனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தலைக்கவசத்தை இத்தாலியிலிருந்து வரவழைத்தார். இதற்குச் சுமார் 5,000 யூரோ செலவழித்தார். தேவையான இதர பொருள்களை வாங்க மேலும் $15,000 செலவிட்டதாக சூரியா நினைவுகூர்ந்ார்.
மலேசிய கார்ட்டிங் பந்தயத்தில் 2008ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்தையும் ஆசிய கார்ட்டிங் 'ஓப்பன்' பிரிவுப் பந்தயத்தில் 2009ல் எட்டாவது இடத்தையும் அவர் பிடித்தார்.
அத்துடன் 2010ஆம் ஆண்டின் 'சிங்கல் சீட்டர்' பிரிவில் ஆசிய ஃபார்முலா ரெனால்ட் பந்தயத்தில் ஆறாவது நிலையில் வந்தார். சூரியா 2009ஆம் ஆண்டின் 'மக்காவ் ஜிபி'யில் கலந்துகொண்டபோது அவர் 7ஆம் இடத்தை எட்டிப் பிடித்தார். அவருடன் பந்தயத்தில் புகழ்பெற்ற கார்லொஸ் செய்ன்ஸும் கலந்துகொண்டதாக தெரியவந்தது.
இதற்கிடையே தமக்கு நகைச்சுவையான அனுபவங்களும் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட சூரியா, மேடையில் தாம் நின்றிருந்தபோது சிங்கப்பூர் கொடிக்குப் பதிலாக இந்திய நாட்டுக் கொடியேற்றப்பட்டதாகக் கூறிச் சிரித்தார்.
இதுபோன்ற பந்தயங்களில் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்கெடுக்காத காரணத்தால் சிங்கப்பூரர்களுக்கும் இவற்றில் ஆர்வம் உண்டு என மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அறிவதில்லை என்றார் அவர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் கூடிய விரைவில் எஃப்1 பந்தயத்தில் கலந்துகொண்டு நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கிறார் சூரியா.
"தவிர்க்க முடியாத சவால்களால் நான் என் கனவைக் கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும், இந்தப் பந்தயங்களின் மூலம் பல நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் எனக்குக் கிடைத்துள்ளனர்," என முகம் மலரக் கூறினார் சூரியா.