சிங்கப்பூரின் ஃபார்முலா 1 கிராண்ட் பிரி, புதிய சாதனை படைத்துள்ளதை நாம் அறிவோம். 2008ஆம் ஆண்டு தொடங்கியதுமுதல் என்றும் இல்லாத எண்ணிக்கையாக 302,000க்கும் மேற்பட்டோர் இந்த மூன்று நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். ஃபார்முலா 1 சிங்கப்பூர் கிராண்ட் பிரி 2008ல் ஆரம்பிக்கப்பட்டது முதல் சுற்றுப்பயணம் தொடர்பான விற்பனைகளில் அதிகரிப்பு பதிவாகி வருகிறது. $1.5 பில்லியனுக்கும் மேற்பட்ட வருவாய் இவற்றின் மூலம் கிடைத்துள்ளது.
கார் பந்தயம் தொடர்பில் ஒப்பந்தவழி இணைந்த நிறுவனங்களில் சிங்கப்பூரில் பதிவானவை 90%. இவற்றில் உணவு, பான நிறுவனங்கள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள், தளவாட மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் போன்றவை அடங்கும். பந்தயத்தடம் அமைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுற்றி அமைந்திருக்கும் வர்த்தகங்களுக்கும் அனுகூலம் ஈட்டித்தரும் நிகழ்வாக எஃப்1 அமைந்துள்ளது. ஆர்ச்சர்ட் ரோடு, கிளார்க் கீ, கம்போங் கிளாம், செந்தோசா போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடல் விருந்து நிகழ்ச்சிகளால் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் வர்த்தகங்களுக்குப் பொருளியல் பலனும் கிட்டியுள்ளது.