பேங்காக்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்கவிருப்பதை முன்னிட்டு விளையாட்டை அரசியலாக்கக்கூடாது என்று பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் கூறியுள்ளார். இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டி கத்தாரில் நடைபெறுவதன் தொடர்பில் சர்ச்சை தொடர்வதையொட்டி அவர் அவ்வாறு சொன்னார்.
"விளையாட்டை அரசியலாக்கக்கூடாது என்பது எனது கருத்து," என்றார் மெக்ரான். அவரின் நாடான பிரான்ஸ்தான் உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளர்கள்.
கத்தாரின் மனித உரிமை மீறல்கள், அந்நாட்டின் ஓரினக் காதலர்கள் நடத்தப்படும் விதம் ஆகியவற்றின் தொடர்பில் சர்ச்சை நிலவுகிறது. அதனால் அந்நாட்டில் உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படக்கூடாது என்றும் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகள் இதன் தொடர்பில் குறை கூறிவந்துள்ளன.
"போட்டியை எந்த நாடு ஏற்று நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்போது இதுபோன்ற கேள்விகளை எழுப்பியிருக்கவேண்டும்," என்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் திரு மேக்ரான் செய்தியாளர்களிடம் கூறினார். பேங்காக்கில் நடைபெறும் ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் ஒத்துழைப்பு மன்றத்தின் மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர் உலகக் கிண்ணத்தைப் பற்றிப் பேசினார்.
கத்தாருக்கு மரியாதை அளிக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான கைப்பட்டையை அணியப்போவதில்லை என்று பிரான்சின் கோல் காப்பாளரும் அதன் அணித் தலைவருமான ஹூகோ லோரிஸ் முன்னதாகக் கூறியிருந்தார்.
இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுவரை பிரான்ஸ் சென்றால் அந்நிகழ்வைக் காண திரு மெக்ரோன் கத்தாருக்குப் பயணம் மேற்கொள்வார். 2018ஆம் ஆண்டு போட்டியில் பிரான்ஸ் கிண்ணத்தைக் கைப்பற்றியபோது அதைக் காண திரு மெக்ரோன் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.