எத்தனையோ கடந்துவிட்டோம், இதையும் நாம் கடந்து போகலாம் என்று தனக்குள் தோன்றியது என்றார் 66 வயதான ஓய்வுபெற்ற திருவாட்டி உஷா மோகன ரங்கம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் கட்ட மார்பகப் புற்றுநோயால் அவதியுற்றார். தனக்கு இப்படி ஒரு நோய் வந்துவிட்டது என்று அறிந்த அவர், மன வலிமையுடன் எதிர் நீச்சல் அடித்தார்.
புற்றுநோய்க் கட்டி
2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றரை வயது பேத்தி மார்பில் சாய்ந்துகொண்டு விளையாடியபோது, இடது மார்பகத்தில் திடீரென வலி தோன்றியது.
இதுவரை அப்படி ஒரு வலியை எதிர்நோக்காத அவர், தன்னுடைய மார்பகத்தைத் தொட்டபோது, சிறிய கட்டி இருப்பதை உணர்ந்தார்.
பலதுறை மருந்தகத்தில் செய்த மெமோகிராம் பரிசோதனை வழக்கத்திற்கு மாறானதாக இருந்ததால், அவர் டான் டோக் செங் மருத்துவமனையில் பயாப்சி எனும் திசு ஆய்வு செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
1.4 செ.மீ. அளவில் புற்றுநோய்க் கட்டி அவருடைய இடது மார்பகத்தில் கண்டறியப்பட்டது. ஆய்வின் முடிவு சாதகமாக இல்லாத போதிலும், உஷா மனம் தளரவில்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி, புற்றுநோய்க் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம் அல்லது மாஸ்டெக்டமி எனும் முழு மார்பகத்தையே எடுத்துவிடலாம்.
உஷா தன்னுடைய உறவினர் ஒருவர் சென்னையில் மருத்துவராக இருப்பதால், சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்னைக்குச் சென்றார்.
சென்னையில் சிகிச்சை
சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில், ஒரு மணி நேர அறுவைசிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது.
இருப்பினும், அவருடைய சிகிச்சை முழுமையாக நிறைவடையவில்லை. எதிர்காலத்தில் மீண்டும் புற்றுநோய் வாராமல் இருப்பதற்கு, அவர் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை செல்ல வேண்டியிருந்தது.
சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தில் அவர் கீமோதெரபியும் கதிர்வீச்சு சிகிச்சையும் மேற்கொண்டார். கீமோதெரபி இவரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.
இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து, மூன்று வாரங்களுக்கு ஒரு முறை ஒரு வித கீமோதெரபியும் வாரத்திற்கு ஒரு முறை மற்றொரு வித கீமோதெரபியும் இவருக்கு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு கீமோதெரபி அமர்வும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு இடம்பெற்றன.
மேலும் பிரச்சினைகள்
65 கிலோ கிராமிலிருந்து, 54 கிலோ கிராமுக்கு மெலிந்த உடல், முடி உதிர்தல், கை, கால் நகங்கள் சாம்பல் நிறத்தில் மாறியது, சுவை இழந்தாலும், உடல் பலத்திற்குச் சாப்பிட வேண்டிய சூழல் ஆகியவை உஷாவை உலுக்கின. அதற்கும் மேலாக மன ரீதியாகவும் இவர் பாதிக்கப்பட்டார்.
அனாவசியமாக உணர்ச்சிவசப்படுதல், தனக்கு குடும்பத்தினர், குறிப்பாக கணவர், மகன், மகள் ஆதரவு நிறைந்திருந்தாலும் தன்னை யாரும் பொருட்படுத்துவதில்லை என்று நினைத்துக்கொண்டு தன்னை வருத்திக்கொண்டார்.
கீமோதெரபி முடிந்த கையோடு, ஒரு மாதத்திற்கு அன்றாடம் இவர் கதிர்வீச்சு சிகிச்சை செய்துக்கொண்டார்.
சிகிச்சைகளை வெற்றிகரமாக ஒரு நொடியும் துவண்டுபோகாமல் முடித்த உஷா, தற்போது ஆரோக்கியமாக தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறார்.
குடும்பத்தில் யாருக்கும் வராத புற்றுநோய் உஷாவின் வாழ்க்கையைச் சிதைத்தது. இன்று வரை எந்த காரணத்திற்கு தனக்கு மார்பகத்தில் கட்டி வந்தது என்று தெரியாமல் இருக்கும் உஷா,
உடனடிப் பரிசோதனை தீர்வு காண உதவும்
“பெண்கள், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, உடலில் எவ்வித மாற்றமும் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மெமோகிராம் செய்துகொள்வது மிக முக்கியம்,” என்று வலியுறுத்தினார்.