வெய்யில் கொளுத்துகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் பெரும்பாலும் 30 டிகிரிக்கு அதிகமாகத்தான் வெப்பநிலை உள்ளது. இதனால் உடல் வெப்பமும் அதிகரிக்கிறது.
உடல் வெப்பநிலை சீராக இருக்கும் வரை உடலில் பாதிப்பு நேராது. உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது உடல் சூடு, கண்களில் எரிச்சல், வயிற்று வலி, அமிலத்தன்மை அதிகரிப்பது, வாயு போன்ற செரிமானப் பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும்.
நீரேற்றமாக இருப்பது உடல் சூட்டைக் குறைக்கும் ஒருவழி. அதிகபட்ச நீரேற்றத்திற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
நீர் குடிக்க வேண்டுமென்றால் இதமாக சில்லென்ற குளிர்பானங்களே பெரும்பாலானோரின் தேர்வாக இருக்கும். ஆனால், தேங்காய் - இளநீர் ஷேக்குகள், பபிள் டீ போன்ற பானங்களில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
இனிப்பு இல்லாத பானங்கள் பலருக்கும் பிடிக்காமல் இருக்கும். இனிப்பைக் குறைத்துக் கொள்ளலாம். அல்லது வெள்ளைச் சீனிக்குப் பதிலாக நாட்டுச் சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
ஆனால், இவற்றில் கலோரி குறைவாக இருப்பதில்லை. வெள்ளைச் சர்க்கரையைப் போலவே இவற்றிலும் ஒரு தேக்கரண்டியில் 40 முதல் 70 கலோரிகள்வரை இருக்கும்.
ஸ்டீவியா, மாங்க்ஃப்ரூட் போன்ற கலோரி இல்லாத இனிப்பும் உண்டு.
இயற்கையாகக் கிடைக்கும் இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, வெள்ளரி, பதநீர், எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, பழச்சாறுகள் போன்ற பானங்களை அருந்தலாம்.
வெந்தயத் தண்ணி, சோம்புத் தண்ணி போன்றவை உடல் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை.
வெப்பத்தைக் குறைக்கும் சில சுவையான பானங்களை இங்கே பார்க்கலாம்.
அன்னாசி இளநீர்
தேவையான பொருள்கள்
300 கிராம் உறைந்த அன்னாசித் துண்டுகள்
500 மில்லி குளிர்ந்த இளநீர்
4 - 5 புதினா இலைகள், சுவைக்கு இனிப்பு
செய்முறை
எல்லாப் பொருள்களையும் பிளெண்டரில் போட்டு அரைத்து, கண்ணாடிக் குவளையில் விட்டு பருகவும்.
தேவையான பொருள்கள்
3 லெமன்கிராஸ்
10-12 பாண்டன் இலைகள்
1 லிட்டர் தண்ணீர்
சுவைக்கு இனிப்பு
செய்முறை
லெமன்கிராசின் வேர், முனைப் பகுதிகளை வெட்டி அப்புறப்படுத்தவும். வெளிப்புற அடுக்கையும் உரித்துவிடவும். நடுப்பகுதியைக் குறுக்காக மெல்லிய வட்டங்களாக வெட்டி, பெரிய பாத்திரத்தில் போடவும். தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
பாண்டன் இலைகளை நன்கு கழுவி, நடுவில் பாதியாகக் கிழித்துக்கொள்ளவும். பிறகு 4 முதல் 5 சென்டிமீட்டர் நீளத்திற்கு வெட்டி, கொதிக்கும் நீரில் போடுங்கள்.
தண்ணீர் சூடானதும் அடுப்பைக் குறைத்துவைத்து 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையை தேவையான அளவு சேர்க்கவும். கரையும் வரை கிளறவும்.
ஆறவிட்டு, வடிகட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்படுத்தி குடிக்கவும்.
தேவையென்றால் குளிர்நீர் அல்லது ஐஸ்கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
பாண்டன் லெமன்கிராஸ் பானம்
புதினா தேநீர்
ஒரு கைப்பிடி அளவு புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். தேன் கலந்து பருகலாம். இதை சூடாகவும் குடிக்கலாம், குளிரவைத்துக் குடிக்கலாம். புதினா குளிர்ச்சித் தன்மை கொண்டது.
ஸ்ட்ராபெர்ரி சாறு
லவங்கப்பட்டை, ஸ்ட்ராபெர்ரி பானம்: 4-5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சிறிது லவங்கப்பட்டை, புதினா சேர்த்து பிளெண்டரில் போட்டு அரைக்கவும். பின் வடிகட்டி, ஒரு மணி நேரம் கழித்து பருகலாம். விரும்பினால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்படுத்தியும் பருகலாம். உடல் வெப்பத்தைக் குறைப்பதோடு எடை குறையவும் உதவும்.
சுவை மோர்
பசியின்மை, செரிமானக் கோளாறு உள்ளவர் களுக்கும் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் மோர் சிறந்த நிவாரணம் தரும். வயிறு சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் தினமும் மோர் அருந்துவது நல்லது. பிளெண்டரில் ஒரு மேசைக்கரண்டி தயிரை விட்டு, தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு புதினா, கொத்தமல்லி இலைகள், சிறிதளவு கேரட் சேர்த்து விழுதாக அரைத்து பருகலாம்.
கற்றாழை பானம்
கற்றாழையின் சதைப்பகுதியைச் சுரண்டி எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வழுவழுப்பு போக தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.
சில துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதியை பிளெண்டரில் போட்டு தண்ணீர் விட்டு அரையுங்கள். பின் அதில் எடுத்துவைத்திருக்கும் கற்றாழைத் துண்டுகள் சிறிதளவு தேன் கலந்து பருகலாம்.
வெள்ளரி
எலுமிச்சை
தேவையான பொருள்கள்
1 சிறிய ஜப்பானிய வெள்ளரி, 120 முதல் 150 கிராம்
1 எலுமிச்சை
¼ தேக்கரண்டி உப்பு
300 முதல் 350 மில்லி தண்ணீர், (டானிக் வாட்டர், சோடா போன்றவற்றை சேர்க்கலாம்.)
செய்முறை
வெள்ளரிக்காயின் முனைகளை வெட்டி விட்டு, வெள்ளரிக்காயை குறுக்காக சிறு துண்டுகளாக நறுக்கவும். பிளெண்டரில் போட்டு அரைக்கவும். பின் அதில் எலுமிச்சையை சாறு பிழிந்து விடவும். தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கவும். தேவையானால் இனிப்புச் சேர்க்கலாம். கலந்து உடனே குடித்துவிடுங்கள்.
பேஷன்ஃப்ரூட் தேநீர்
தேவையான பொருள்கள்
600 மில்லி லிட்டர் தண்ணீர்
4 பச்சை தேயிலை (கிரீன் டீ) பைகள்
2 பேஷன்ஃப்ரூட், சுவைக்கு இனிப்பு
செய்முமுறை
சுடுநீரில் தேநீர் பைகளைப் போட்டு 10 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு பைகளை அகற்றி, ஆறவிடவும். குறைந்தது மூன்று மணிநேரம் குளிரூட்டவும். பேஷன்ஃப்ரூட் பாதியாக வெட்டி, பழத்தை பிளெண்டரில் போட்டு அரைக்கவும். அதில் குளிர்ந்த தேநீர் சேர்த்து கலக்கவும். விருப்பமான இனிப்பைச் சேர்த்து உடனே குடியுங்கள்.
தர்ப்பூசணி சோஜு
தேவையான பொருள்கள்
800 கிராம் முதல் 1 கிலோ வரை தர்ப்பூசணி சதை
360 மில்லி லிட்டர் பாட்டில் சோஜு
2 பெரிய பொடி எலுமிச்சை (லைம்) சாறு
செய்முறை
எல்லாப் பொருள்களையும் பிளெண்டரில் போட்டு அரைத்து குவளையில் விட்டு பருகவும்.
தர்ப்பூசணி சதையைச் சுரண்டி எடுத்த பழத்தின் ஓட்டில் விட்டுப் பருகும்போது சுவையே தனி!