குளிர்காயும் மேகங்களைக்
கொஞ்சம் விலகச் சொல்லிப்
பகலின் முதல் ஒளி வீசும் விடியல்
புக்கிட் பாஞ்சாங் வழியாக
பூன் லே செல்லும் பேருந்தில்
பயணம் செல்ல உட்லண்ட்ஸ்
பேருந்து நிலையத்தில் நான்
அடிமேல் அடி வைத்து வந்து
அதே பேருந்துக்கான வரிசையில்
குறிப்பிட்ட இடைவெளி விட்டு
நிற்கும் ஓர் பெரியவர் அவர்
அவர் கையில் திருமூலர் திருமந்திரம்
என் கையில் பாரதியார் கவிதைகள்
நான் அவரைப் பார்க்கும்பொழுது
அவரும் என்னைப் பார்த்ததினால்
ஏற்பட்ட எதார்த்தமான கண் கலப்பு
அவர் புத்தகத்தை அவர் புரட்டியெடுத்தார்
என் புத்தகத்தை நான் புரட்டியெடுத்தேன்
தமிழை வாழ்த்தியது கவிதை!
ஓங்காரத்தைப் போற்றியது மந்திரம்!
அறிவே தெய்வமென்றது கவிதை!
அறியாமையே மயக்கமென்றது மந்திரம்!
புது உலகம் கேட்டது கவிதை!
புலனடக்கம் பற்றிப் பேசியது மந்திரம்!
மவுனத்தாழிட்டு மனிதர்கள்
வாயைப் பூட்டினால்
பக்கங்கள் திறந்து புத்தகங்கள் பேசுகின்றன!
- பிரபு பாலா