குட்டிக்கதை
இரா சத்திக்கண்ணன்
ஐந்து வயதிருக்கும் அந்த சிறுமிக்கு. அவள் பெயர் எனக்குத் தெரியாது. அம்மு என்று பெயர் வைத்தேன். ஜீன்ஸ் ஸ்கர்ட்டும் வெள்ளை ஷர்ட்டும் அணிந்திருந்தாள். வார் வைத்த செருப்பணிந்திருந்தாள். கையில் கொழுகொழுவென்ற வெள்ளை பொம்மைவேறு. கிருஷ்ணர் கொண்டையுடன் இருந்தாள்.
மழை கொட்டுகிறது. கண்ணைப்பறிக்குமளவுக்கு மின்னல்கள் பளிச்சிடுகின்றன. சிவப்பு விளக்கு எரிவதால் டிராபிக் சிக்னலில் ஒன்றும் தெரியாதுபோல் சமத்துக்குழந்தையாக நின்றுகொண்டிருந்தாள் அம்மாவின் வலதுகையைப் பிடித்தபடி.
அம்மா இடக்கையில் கருப்புக் குடையுடன், தோளில் கருப்பு ஹாண்ட் பேக்குடன் நிற்கிறாள்.
சாலையைக் கடக்க இருபது வினாடிகள் கிடைக்கும். டிராஃபிக் விளக்கில் பச்சை மனிதன் நடந்ததுதான் தாமதம்.
அம்முவோ துள்ளிக்குதிக்கலானாள். அம்மாவோ "கேளுடி, துள்ளாதே," என்கிறாள். அம்முவும் துள்ளுவதை நிறுத்துவதாய்த் தெரியவில்லை. அம்மாவிற்கோ ஒரு நொடி யுகமாகிறது. அம்முவின் துள்ளலில் மழைத்தண்ணீர் தெறிக்கிறது, பறக்கிறது. அம்மு ஆனந்தக் கொண்டாட்டத்தில் திளைக்கிறாள்.
குடையை விட்டு விலகுகிறாள். தெப்பமாய் நனைகிறாள்.
இன்னும் பத்து விநாடிகளில் சாலையைக் கடக்க வேண்டும். அருகில் சாலையைக் கடப்போர் அம்முவின் விளையாட்டை எண்ணி சந்தோசப்படுகின்றனர். நம்மால்தான் முடியவில்லை, அச்சிறுமியாவது மழையில் விளையாடட்டுமென்று.
கையில் வைத்திருந்த வெள்ளைப் பொம்மையையும் மழையில் குதிக்கவைக்கிறாள்.
ஆக அம்முவுக்கும் பொம்மைக்கும் அத்தனை மகிழ்ச்சி.
அம்மா மீண்டும் அம்முவின் கையைக் கெட்டியாகப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்கிறாள். ஒருவழியாக சாலையை கடந்தாகிவிட்டது.
அவர்களின் பின்னாலேயே தொடர்ந்துவரும் நானும், என் வாழ்க்கை என்னைத் தரதரவென இழுத்துச் சென்றாலும் ஒவ்வொரு கணத்திலும் மகிழவேண்டும் என்பதை உணர்ந்து மென்மையாக புன்னகைத்து குடையைச் சுருக்கினேன்!