சிறுகதை
கி. சுப்பிரமணியம்
இருபத்து மூன்று வயது
இளைஞனின் தவிப்பு!
உலகத்தையே சுற்றி வரவேண்டும் என்ற பேராவல்! அப்படி உலகம் சுற்றும் அளவிற்கு, அறவே வசதியோ பணமோ இல்லையென்ற உண்மை தெரிந்தும் கற்பனைக்கடலில் பயணித்து மிதப்பான்.
உலகம் சுற்றுவது ஒருபுறம் இருக்கட்டும். பக்கத்தில் இருக்கும் மலேசியாவிற்கே சரியாகச் சென்று வந்தவனில்லை குமார்!
ஏதோ இருமுறை அருகில் இருக்கும் ஜோகூர் பாருவிற்கு நண்பர்களுடன் சென்றுவந்துள்ளான். அவ்வளவுதான்!
அப்படிப் போக வேண்டி இருந்ததால், நீல நிற பாஸ்போர்ட் ஒன்றிற்கு விண்ணப்பித்துப் பெற்றுக்கொண்டான்.
1973ஆம் ஆண்டில் பெற்ற அந்த பாஸ்போர்ட், மலேசியாவின் கடைசி வடக்கு மாநிலம் பெர்லிஸ் வரை மட்டும் செல்ல அனுமதி உண்டு. வெளிநாடுகளுக்குச் செல்ல அது பயன்படா!
மலேசியாவின் பினாங்கு வரை சென்று திரும்ப ஆவல் கொண்டான் குமார். தூரப் பயணம் என்றால் குமாரின் தாய் தயக்கம் காட்டுவாள் என்பதால், கோலாலம்பூர் வரை சென்று திரும்புவதாக அவளிடம் சொல்லிவைத்தான்.
தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் முன்கூட்டியே கோலாலம்பூர் பயணத்திற்கான பதினோரு வெள்ளிக் கட்டணத்தைக் கட்டி, மூன்றாம் வகுப்பு பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டான்.
மறுநாள் தாயிடம் விடைபெற்றுக்கொண்டு ரயில் நிலையத்திற்கு விரைந்தான் குமார்.
தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. மலேசிய ரிங்கிட்டுக்குப் பணத்தை மாற்றிக்கொண்டான். சிங்கப்பூர் தொண்ணூறு காசிற்கு ஒரு ரிங்கிட்! அந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறினான் குமார். அவன் கொண்டு வந்திருந்த ஒரு நடுத்தர அளவு கைப்பெட்டி ஒன்றை இருக்கைக்கு அருகே வைத்துக்கொண்டு, ரயில் புறப்படும் நேரத்தை எதிர்பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டது, இருபுறமும் தாண்டிச் செல்லும் ரயில் பாதையோர வீடுகளையும், இயற்கை காட்சிகளையும் ரசித்தபடி அமர்ந்திருந்தான். ஒரு முக்கால் மணி நேரத்தில், சிங்கப்பூர் தீவைத் தாண்டி மலேசிய தீபகற்பத்திற்குள் ரயில் சக்கரங்கள் சுழன்றன.
தலைநகர் கோலாலம்பூரை, ஆறு மணிநேரத்திற்குப்பின் சென்றடைந்தான்.
கைப்பெட்டியுடன் ரயிலை விட்டு இறங்கி, அந்தப் பழங்கால ரயில் நிலையக் கட்டடத்தை ரசித்த வண்ணம் கடைத் தெருக்களைக் கடந்து ஒரு ஹோட்டலைக் கண்டுபிடித்துப் பதிவு செய்துகொண்டான்.
அடுத்த மூன்று நாள் தலைநகரைச் சுற்றிவிட்டு, ஈப்போ நகரத்துக்கு டாக்சியில் சென்று, அங்கும் இரண்டு நாள் தங்கிவிட்டு, அவன் ஆவலுடன் பார்க்க விரும்பிய பினாங்கிற்கு விரைந்தான்
ஒரு மூன்று மணி நேரப் பயணம், புரோவின்ஸ் வெலஸ்லி மாநிலத்தின் தலைநகர் பட்டர்வொர்த்தில் டாக்சி நின்றது. இங்கிருந்து பினாங்கு தீவிற்குச் செல்லக் கப்பல் சவாரி செயல்பட்டது. அதில் ஏறிப் பினாங்கு தீவின் ஜார்ஜ் டவுன் அடைந்தான் குமார்.
பல இந்திய வணிகர்கள் இங்கு மிகவும் சுறுசுறுப்பாக வாணிபத்தில் ஈடுபடுவதைக் கண்டான். மிகவும் மகிழ்ச்சியுடன் தெருக்களைப் பார்த்தபடி ஒரு சிறிய ஹோட்டலில் பதிவு செய்துகொண்டபின் பினாங்கை இரண்டு நாள் நன்றாகச் சுற்றிப் பார்த்தான். அடுத்த நாள், மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் தெருவில் நடக்க ஆரம்பித்தபோது ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க, சற்று உயரமான, சிவந்த மேனியும், மெல்லிய தோற்றமும் கொண்ட ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான் குமார்.
வடஇந்தியரைப் போல் தோற்றத்தில் இருந்தான் அவன். சற்று உற்றுப் பார்த்துவிட்டு, குமாரை நெருங்கினான்.
"ஹலோ, நான் பாபு. உன்னைப் பார்த்தால் வெளியூர் போலத் தெரிகிறது," என்று புன்னகையுடன் குமாரிடம் அறிமுகக் கைகுலுக்கலுக்குக் கையை நீட்டினான்
"ஆம் நான் சிங்கப்பூரிலிருந்து வருகிறேன்," என்று குமார் பதில் சொல்லிப் பாபுவின் கைகளைக் குலுக்கினான்.
மிகவும் குதூகலம் அடைந்தான் பாபு.
"இன்னும் சில மாதங்களில் நானும் சிங்கப்பூர் வரப்போகிறேன் வியாபாரத்திற்காக," என்றான். ஆரம்பத்தில் பாபுவின் பேச்சும் போக்கும் குமாருக்குச் சற்றுத் தயக்கத்தையும் நம்பிக்கையின்மையையும் தந்தது. ஆயினும் போகப் போக அந்தச் சந்தேகம் தணிந்தது. அவன் பேச்சில் நட்பின் சாயலைக் கண்டான் குமார்.
அங்கு, சூலியா ஸ்திரீட் என்னும் தெருவில், ஒரு வயதான வட நாட்டவர் தள்ளுவண்டி ஒன்றைச் சாலையோரம் நிறுத்தி டீ வியாபாரம் செய்து கொண்டிருக்க, அங்கு சென்று இருவரும் சுவையான தேநீர் அருந்தியபடி மீண்டும் பேசிக்கொண்டிருந்தனர். தான் மராத்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்றும் நன்கு தமிழ் பேசக் கற்றுக் கொண்டதாகவும் சொன்னான் பாபு. அங்கு அவன் செய்யும் சில்லறை வியாபாரம் பற்றிப் பேசினான். எத்தனை நாள் இங்கு தங்கப் போகிறாய் எனப் பாபு கேட்க, இன்னும் மூன்று நாள் தங்கிவிட்டுச் சிங்கப்பூர் திரும்பப்போவதாகச் சொன்னான் குமார்.
நாளைக்குத் தாய்லாந்துப் பகுதி, பாடாங் புசார் போகிறேன். அங்கு வியாபாரத்திற்காகக் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டும் நீயும் என்னோடு வருகிறாயா என கேட்டான் பாபு.
"அது தாய்லாந்து எல்லைக்கு உள்ளே இருக்கிறது. என்னுடைய பாஸ்போர்ட்டால் அங்கு செல்ல அனுமதி இல்லை," என்றான் குமார்.
"கொஞ்சம் அருகில் இருக்கும் சுங்கைப் பட்டாணி என்ற ஊரிலுள்ள இமிகிரேஷன் ஆபீசில் தாய்லாந்திற்குச்செல்ல நாற்பத்தெட்டு மணி நேர விசா தருவார்கள். வேண்டுமென்றால் அங்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்," என்றான் பாபு. இது வீண் அலைச்சல் போல் தோன்றியது குமாருக்கு.
"வேண்டாம் பாபு. நான் இங்கு தங்கிவிடுகிறேன். நீ போய்ட்டு வா," என்றான் குமார்.
கொஞ்ச நேரச் சிந்தனைக்குப்பின், "எனக்கு மலேசியப் பகுதி, பாடாங் புசார் சுங்கச்சாவடியின் அருகே ஒரு நண்பர் மூலம் இரண்டு நாள் விசா எடுத்துக்கொள்ள வழியுண்டு," என்று குமாரை வற்புறுத்தவே குமாரும் கொஞ்சம் தயக்கத்துடன் சரி என்று ஒப்புக்கொண்டான்.
நாளைக் காலை சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் பாபு அகன்றான்.
பாபுவை நம்பி மலேசியாவின் எல்லையைத் தாண்டித் தாய்லாந்துக்குள் போவதைப் பற்றி சிந்தித்தபடியே சற்று குழப்பத்துடன் ஹோட்டலை அடைந்தான் குமார்.
மறுநாள் காலை, தான் கொண்டுவந்த பயணப் பெட்டியை ஹோட்டலின் அனுமதியோடு அங்கு பாதுகாப்பாக வைத்துவிட்டு, ஒரு சிறிய தோல் பையில் இரண்டு நாளுக்கு வேண்டிய துணிகளுடன் பாபுவைச் சந்தித்தான் குமார். இருவரும் பட்டர்வர்த் சென்று அங்கிருந்து ரயிலில் ஏறினர்.
"இந்த ரயில் இரண்டரை மணி நேரத்தில் மலேசியப் பகுதி பாடாங் புசாரில் நின்றுவிடும்.
உன்னை ஓரிடத்தில் நிற்கவைத்துவிட்டு நான் இமிகிரேஷன் சென்று எனது பாஸ்போர்ட்டைக் காட்டிவிட்டுப் பின்பு உன்னைப் பக்கத்தில் உள்ள வேறு ஒரு ஆபீசுக்கு அழைத்துச்சென்று விசா வாங்கித் தருகிறேன்," என்று சொல்லிவைத்தான் பாபு.
"கவலைப் படாதே எல்லாம் சரியாகிவிடும்," என்று சொல்லி, தாய்லாந்து பகுதி, பாடாங் புசாரில் உள்ள குதூகலங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தான். ரயில் மலேசியப் பகுதி பாடாங் புசார் ரயில் நிலையத்தில் நின்றது.
வெளியில் வந்தவுடன் ஒரு இடத்தில் குமாரை உட்கார வைத்துவிட்டு அவன் மட்டும் இமிகிரேஷனை நோக்கி நடந்தான். ஒரு இருபது நிமிடத்திற்குப் பிறகு அங்கிருந்து நடந்து வந்தான்.
"சரி புறப்படு. உன் விசா விஷயமாக இன்னோர் இடத்திற்கு நடந்து செல்லவேண்டும்," என்றான் பாபு. குமார் ஒன்றும் பேசாது பாபுவைப் பின்தொடர, பாபு ஒரு மண் பாதை வழியாக ஏதும் பேசாது ஒரு பத்து நிமிடம் கிராமப்புறம் போன்ற பகுதியைக் கடந்து, ஒரு ரயில் தண்டவாளம் ஓரமாக நடக்கத்தொடங்கினான்.
"என்ன நீ பாட்டுக்கு நடந்து கொண்டே போறியே, எங்கே போகிறோம்?" எனக் கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டான் குமார்.
முன்னுக்கு நடந்து போய்க்கொண்டிருந்த பாபு நின்று, குமாரைத் திரும்பிப்பாரத்துக் கடகடவெனச் சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறாய்" எனச் சற்றுப் பயத்துடன் கேட்டான் குமார்.
"வெல்கம் டு தாய்லாந்து," என மேலும் வேகமாய்ச் சிரித்தான் பாபு.
அதிர்ந்து போனான் குமார்.
"விசா இல்லாமல் என்னிடம் பொய் சொல்லி, திருட்டுத்தனமாக அழைத்து வந்துவிட்டாயே," என்று ஆத்திரத்துடன் பேசினான் குமார்.
"பயப்படாதே இந்தக் குறுக்குப்பாதை, பாஸ்போர்ட், மற்றும் விசா இல்லாதவர்கள் செல்லும் பாதை. திரும்பும்போதும் இதே வழியில் சென்றுவிடலாம். நான் பலரை இப்படி அழைத்து வந்துள்ளேன்," என்று சொல்லிக் குமாரின் தோளைத் தட்டிக் கொடுக்க, அதைக் குமார் ஆத்திரத்துடன் வேகமாய் விலக்கிவிட்டான்.
"ஆத்திரப்படாதே குமார். உன்னை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. நீ வீடு திரும்பும்முன் இங்கு அழைத்துவந்து மகிழ்ச்சிப்படுத்தலாம் என்று நினைத்துத்தான் இதைச் செய்தேன்," என்று சமாதானப்படுத்தினான். ஆயினும் குமாருக்குப் பாபு செய்தது பெரிய ஏமாற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. நன்றாக மாட்டிக்கொண்டோம். இவனைப் பகைத்துக்கொள்வதில் பயனில்லை.
எப்படியும் நாளையே இவன் வகுத்த வழியிலேயே மீண்டும் பிடிபடாமல் வெளியேற வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டான் குமார்.
அதற்குப்பின் பாபுவிற்குக் கொஞ்சம் முகம் கொடுத்துப் பேசத் துவங்கினான் குமார்.
ரயில் தண்டவாளத்தைத் தாண்டி ஒரு சிமென்ட் சாலையில் நடந்து சென்றபோதுதான் மக்கள் கூட்டம் அதிகமாகவும் தெருக்களின் கடை விளம்பரங்கள் தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டிருப்பதையும் கண்ணுற்றான் குமார்.
அடிக்கடி குமாரை உற்சாகப்படுத்துவதில் தீவிரம் காட்டினான் பாபு.
பாடாங் புசார் நகரத்திற்குள் நுழைந்து ஒரு நவீன ஹோட்டலில் பதிவு செய்துகொண்டனர். பின்பு குளித்துவிட்டு நகரத்தைச் சுற்றி வந்தனர்.
பல ஆடம்பர மதுபானப் பார்களும் பல கேளிக்கை நிரம்பிய நகரமாகவும் இருந்தது தாய்லாந்துப் பகுதி பாடாங் புசார்.
பாபுவும் கொஞ்சம் பொருட்களை விற்பனைக்காக வாங்கினான். பாபுவை விட்டு அகலக்கூடாதென்ற பயத்துடன் அவனுடன் தொடர்ந்தான் குமார்.
தெருவிலோ அல்லது ஹோட்டலிலோ போலிஸ் சோதனையிட்டால் அவன் கதி என்னவாகும் என்ற பயத்துடன் இருந்தான்.
"இறைவா, எப்படியாவது இந்தப் பேராபத்தில் இருந்து காப்பாற்று" என இறைவனை வேண்டிக்கொண்டான் குமார்.
பாபுவுக்கு குமாரின் பதற்ற மனநிலை புரிய ஆரம்பித்தது. ஒருவேளை தான் செய்த இந்தக் குறும்புத்தனம் தவறென்று அவனுக்குத் தோன்றியதோ என்னவோ, குமாரின் வாடிய முகத்தைப் பார்த்தபடி, நாளைக் காலை பினாங்கு திரும்பலாம் என்றான்.
இந்த உத்தரவாதம், குமாரின் மனதிற்குக் கொஞ்சம் சாந்தத்தை ஏற்படுத்தியது.
மறுநாள் காலை பசியாறிவிட்டு ஹோட்டலை விட்டு இருவரும் கிளம்பினர். பாபு, இங்கு வந்த அதே பாதையில் திரும்பவும் போய்க்கொண்டிருக்க, குமார் அவனைப் பின்தொடர்ந்தான். பாபு எதுவும் அதிகம் பேசாமலே நடந்தான்.
நகரை விட்டு முன்பு வந்த கிராமம் போன்ற பகுதியில் சிறிது நேரம், நடந்து மீண்டும் அதே ரயில் தண்டவாளத்தில் நடக்க ஆரம்பித்தனர்.
"நாம் மலேசிய எல்லைக்குள் வந்துவிட்டோம். இன்னும் கொஞ்சம் நடந்தால் மலேசிய இமிகிரேஷன் பக்கம் வந்துவிடலாம்," என்று மெதுவாகப் பாபு சொல்லி முடிக்குமுன்...
"நில்லுங்கள்!" என்ற பலத்த குரலொலி கேட்டது. அவ்வளவுதான். குமாருக்கு உடல் வியர்த்து, இதயம் படபடவென அடித்தது. குமார் திரும்பிப் பார்த்தபோது, ஒரு கறுத்த இந்தியர், இமிகிரேஷன் சீருடையில் நின்றுகொண்டிருந்தார்.
உடனே பாபு அவரிடம் சென்று மலாயும் கொஞ்சம் தமிழும் கலந்து பேச முற்பட்டான். அந்த மனிதர் அவன் பேச்சுக்குச் செவி சாய்க்காது இருவரையும் சற்றுத் தொலைவில் இருந்த மலேசிய இமிகிரேஷன் ஆபீசுக்கு அழைத்துச் சென்றார்.
முடிந்தது! எல்லாம் முடிந்தது! என்று மனதிற்குள் அழுதான் குமார். இந்தப் பாவி பாபுவின் பேச்சைக் கேட்டு மாட்டிக்கொண்டோமே என்று நொந்துகொண்டான். அந்த அதிகாரி குமாரைத் தனி அறையொன்றில் அமரச் சொல்லிவிட்டு வெளியில் பாபுவின் பாஸ்போர்ட்டைப் பார்த்தவண்ணம் ஏதோ கடுமையாகப் பேச, பாபுவும் நயமாக ஏதோ பதில் கூறினான். இடையில் ராஜூ என்றே அந்த அதிகாரியைப் பெயர் சொல்லி நயந்தும், குழைந்தும் பேசினான் பாபு. சிறிது நேரம் சென்றபின், அந்த அதிகாரி, குமார் அமர்ந்திருந்த அறைக்கு வந்து, அவன் முன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு, குமாரின் முகத்திற்கு நேராகப் பேச ஆரம்பித்தார்.
"உனது பாஸ்போர்ட்டைக் காட்டு," என்றார். குமார், பையிலிருந்து எடுத்துக் காட்டினான்.
"இந்தப் பாஸ்போர்ட்டைக் கொண்டு தாய்லாந்திற்குள் செல்ல முடியாது எனத் தெரியும் அல்லவா," என்று சற்றுக் கடுமையான குரலில் கேட்டார். 'ஆம்' என்று பதில் சொன்னான் குமார்.
"விசா இருக்கிறதா" என்று கேட்க "இல்லை" என்று அதற்கும் பதில் சொன்னான் குமார்.
"ஆயினும் இது எல்லாம் இல்லாத நிலையில், சட்டத்தை மீறி தாய்லாந்திற்குள் சென்று இருக்கிறாய். இது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா?" என்று சுட்டு விரலைக் குமாரின் முகத்திற்குமுன் நீட்டிக் கேட்டார். குமார் கலங்கிப்போனான். ஆயினும் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, பாபுவின் வலையில் விழுந்து ஏமாந்த கதையை முழுக்க அவரிடம் சொல்லி முடித்தான்.
சற்று நேரம் மௌனமாக வாக்குமூலத்தைக் கேட்ட அந்த அதிகாரி, குமாரின் முகத்தைக் கூர்ந்து கவனித்துவிட்டு, மீண்டும் வெளியில் சென்று பாபுவிடம் ஏதோ திட்டுவதுபோல் பேசும் பாவனை தெரிந்தது.
ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் குமாரின் அறைக்கு வந்தார் அந்த ராஜூ என்ற பெயர் கொண்ட அதிகாரி. குமாரின் முன் அமர்ந்து சற்று நிதானமாகப் பேசினார்.
"இந்தப் பாபு ஒரு கடத்தல் பேர்வழி. பலமுறை பொருட்களைத் தாய்லாந்தின் பாடாங் புசாரில் வாங்கி, மலேசியாவிற்கு வரி ஏதும் கட்டாது குறுக்கு வழியில் எங்களைத் தாண்டித் தப்பித்துப் போய்விடுவான். எங்களால் பிடிபட்டு தண்டிக்கப்பட்டும் உள்ளான். இப்பொழுது உன்னையும் ஏமாற்றி தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். சரி, நிலைமையை அனுசரித்து உன்னை விடுதலை செய்கிறேன். இது மலேசியப் பகுதி இமிகிரேஷன் என்பதால் உன் உண்மை நிலவரம் தெரிந்து உன்னைத் தண்டிக்காது விடுகிறேன்.
"நீ தாய்லாந்துப் பகுதியில் பிடிபட்டிருந்தால் உன் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப்பார். ஒழுங்காக இவனிடம் மீண்டும் மாட்டிக்கொள்ளாமல், சிங்கப்பூர் சென்று சேரு," என்று புத்திமதி கூறி வெளி வாயில் வரை வந்து விட்டார் அந்த நல்ல உள்ளம் படைத்தவர்.
குமார் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அந்த அதிகாரிக்கு நன்றி கூறி நடந்தான். பாதையோரம் பாபு நின்றுகொண்டிருந்தது குமாருக்குத் தெரிந்தும் எதுவும் பேசாமல் ரயில் நிலையம் நோக்கி நடந்தான். பாபு குமாரைப் பின்தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தான்.
"எனக்கு அந்த அதிகாரியை நன்கு தெரியும் குமார். நடந்தது என்னுடைய தவறு. உன்னை நான் தான் எல்லை தாண்டி அழைத்துச் சென்றேன். என்று அவரிடம் வாக்குமூலம் கொடுத்தேன். அதன்பின் தான் உன்னை விடுவித்தார். என்னை நம்பு," என்றான் பாபு.
எப்படியோ அதிகாரியிடமிருந்து தப்பித்த மனத்திருப்தியில் பாபுவின் இந்தச் செய்கையை மன்னிப்பதாகச் சொல்லிக்கொண்டே நடந்தான் குமார்.
"நான் பினாங்கு சென்றதும் இன்று மாலையே சிங்கப்பூர் திரும்ப வேண்டும்," என்றான் குமார். குமாரின் மனநிலையைத் தெரிந்துகொண்ட பாபுவும் சரி என்னும் பாணியில் தலையசைத்தான்.
நீ பழையபடி கோலாலம்பூர் போய் அங்கே இரவு தங்கிவிட்டு மறுநாள் சிங்கப்பூர் செல்லும் அளவிற்கு உனக்குப் பணம் இருக்கிறதா என்றான் பாபு.
குமாரின் கையிருப்பும் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்தும், "சமாளிக்கிறேன்" என்று சுருக்கமாகப் பதில் சொன்னான்.
சிறிது நேரச் சிந்தனைக்குப்பின், "நீ நேராக ஜோகூர் பாரு வரை குறைவான செலவில் செல்ல ஒரு வழி இருக்கிறது. ஆனால் அது மிகவும் களைப்பைத் தரக்கூடிய பயணம்," என்று கொஞ்சம் தயக்கத்துடன் கூறினான் பாபு.
"என்ன அது" என்று ஆவலுடன் கேட்டான் குமார்
'இங்கு ஸ்டார் தினசரிப் பத்திரிகை கம்பெனி, மாலையில், பத்திரிகை கட்டுகளுடன், ஈப்போ, கோலாலம்பூர் வழியாக இரவு முழுதும் பயணித்து மறுநாள் காலை ஜோகூர் பாரு சேரும்.
போகும் இடத்தில், பத்திரிகைக் கட்டுகளை இறக்குவதும், அங்குள்ள பத்திரிகைக் கட்டுகளை ஏற்றுவதுமாக அந்த வண்டி செல்லும். பத்திரிகைக் கட்டுகளுக்கு இடையே இருக்கும் சின்ன இடத்தில் நீ அமர்ந்து செல்லவேண்டும். கொஞ்சம் சிரமமான பயணம். ஒரு ஐம்பது ரிங்கிட் கொடுத்தால் போதும்'. என்று சொல்லி முடித்தான் பாபு.
தனக்கிருக்கும் நிதி நிலைக்கு இந்த ஏற்பாடு சரியாகப்பட்டது. ஆகவே அதற்கு ஒப்புக்கொண்டான் குமார்.
மதியம் அவர்கள் பினாங்கு அடைந்தனர். பாபு பயண ஏற்பாடு செய்துவிட்டு மாலையில் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான். பாபுவின் முகத்திலும் பழைய கலகலப்பு காணப்படவில்லை. மாலையில் சொன்ன இடத்தில் குமார் பாபுவைச் சந்தித்தான்.
பேசிக்கொண்டே இருவரும் பயணம் செய்யவேண்டிய அந்தக் கம்பெனிக்கு வந்துவிட்டனர். அங்கு ஒரு மோரிஸ் வகை சரக்கு வாகனம் நின்றுகொண்டிருக்க, நாளிதழ் கட்டுகளை வண்டிக்கு உள்ளே அடுக்கிக்கொண்டிருந்தனர். அந்த ஓட்டுநரிடம் பேசிவிட்டு, அவனிடம் ஐம்பது ரிங்கிட் பணத்தைக் கொடுத்தான் குமார். சிறிது நேரத்திற்குப்பின் அந்த வண்டி ஓட்டுநரும் இன்னொருவரும் முன் பகுதியில் அமர, தடுப்புக்குப் பின் அடுக்கப்பட்ட நாளிதழ்களின் இடையில் உள்ள சிறிய இடத்தில் குமாரை அமர்ந்துகொள்ளச் சொன்னான் அந்தச் சீன ஓட்டுநர்.
ஓட்டுநர் அவசரப்படுத்தவே வண்டிக்குள் ஏறி அந்தக் காகிதக் கட்டுகளின் நெருக்கத்திற்கு இடையே எப்படியோ ஒரு சிறிய இடத்தைப் பிடித்து கைப்பெட்டியை அணைத்தபடி உட்கார்ந்து கொண்டான் குமார். வெளிக் கதவை அடைத்துவிட்டு ஓட்டுநருடன் வந்தவன் முன்னுக்குச் சென்று அமர்ந்தான்.
வெளியில் நின்றுகொண்டிருந்த பாபுவிற்குச் சென்று வருகிறேன் என்ற தோரணையில் குமார் கை அசைக்கவும் வண்டி புறப்படவும் சரியாக இருந்தது. நின்று கொண்டு கையசைத்த பாபுவின் உருவமும் மெல்ல மறைந்தது. பாபுவின் செய்கையால் ஏற்பட்ட வருத்தம் மனதில் இருந்தும், அவன் பிரிவு, குமாரைக் கொஞ்சம் பாதிக்கத்தான் செய்தது.
வண்டி அந்த மாலை நேரத்தைக் கடந்து வேகமாய் ஈப்போ நோக்கிச் சென்று கொண்டிருந்தது. குமாரும் நடந்த நிகழ்வுகளை வெகுநேரம் நினைத்தபடியே தூங்கிவிட்டான். எவ்வளவு நேரம் தூங்கினான் என்று அவனுக்குத் தெரியவில்லை. வண்டி எங்கோ நிற்பதை உணர்ந்து கண்விழிக்க அது ஈப்போ எனத் தெரிந்துகொண்டான். அங்கு சில நாளிதழ் கட்டுகளை இறக்கிவிட்டு மேலும் சில புதிய கட்டுகளை ஏற்றிக்கொண்டு, வண்டி மீண்டும் புறப்பட்டு கோலா லம்பூர் நோக்கிக் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. குமாருக்கு அந்தக் காகிதக் கட்டுகளுக்குள் உட்கார்ந்து வந்த அசதி கூடிக்கொண்டே போனது. காலை நீட்ட முடியாமல் சிரமப்பட்டான். அந்தச் சிரமத்திலும் களைப்பில் தூங்கிவிட்டான். கிட்டத்தட்ட இரவு ஒரு மணியைத் தாண்டி வண்டி கோலாலம்பூர் அடைந்தது. மீண்டும் காகிதக் கட்டுகளின் பரிமாற்றம் தொடங்கியது. இப்பொழுது பழைய ஓட்டுநர் கூட்டணிக்குப் பதிலாகப் புதிதாக இருவர் மாற்றிக்கொள்ள, வேகமாக ஜோகூர் பாருவை நோக்கிக் கிளம்பியது வண்டி. இப்பொழுது பயணத்தின் சிரமத்தை நன்கு உணர்ந்தான் குமார். கால்களை நீட்ட முடியாத காரணத்தால் நன்றாக மரத்துவிட்டது அவனுக்கு. எப்படியோ போகப்போக, உடல் சோர்வினால், மீண்டும் நன்றாகத் தூங்கினான்.
ஓட்டுநரின் சத்தமான பேச்சால் கண்விழித்தான் குமார். வெளியில் வானத்தில் விடிவெள்ளி முளைத்திருந்தது. "ஜோகூர் பாரு வந்துவிட்டோம்," என்று ஓட்டுநர் மலாய் மொழியில் சொன்னவுடன் ஒரு பெருமூச்சு விட்டான் குமார். ஒரு பத்து நிமிடத்தில் சிங்கப்பூர் செல்லும் பஸ் நிற்கும் இடத்தில் கொஞ்சம் வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டு கீழே இறங்கினான் குமார். அவனை இவ்வளவு தூரம் ஏற்றிவந்த வண்டி அவனுக்கு மவுனமாகப் பிரியாவிடை சொல்லிவிட்டுக் கிளம்பிற்று.
சிங்கப்பூர் செல்லும் பஸ்ஸைப் பிடிக்க, களைத்து, கால் வலியுடன் நடந்தான் குமார். வீடு நோக்கி ஓடியது அவன் மனம்.
வேலி தாண்டி ஓடித் திரிந்து, பல அனுபவங்களைக் கண்ட ஆடு ஒன்று மீண்டும் தாயைத் தேடித் தொழுவம் நோக்கி ஆவலுடன் ஓடுவதுபோல்!