சிறுகதை
பிரதீபா
சாளரம் வழியாக வெளியே பெய்துகொண்டிருந்த மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பொன்மணி. எவ்வித ஆரவாரமுமின்றி ஒரே சீராக மழைத்துளிகள் ஊசிபோல் மண்ணில் இறங்கிக்கொண்டிருந்தன. முதலில் சாலையில் பட்டுத் தெறித்த மழைத்துளிகள் பின்னர், பாம்புபோல் வளைந்து நெளிந்து வடிகாலை நோக்கி வேகமாக ஓடத்தொடங்கின. எதிரே தெரிந்த மரங்களிடமும் எவ்வித சலனமுமில்லை. எவ்வித எதிர்ப்பையும் காட்டாது முழுமையாகத் தங்களை மழையிடம் ஒப்படைத்து நின்றன. அப்படியே ஓடிச்சென்று அந்த மரத்தைக் கட்டிக்கொண்டு மரமோடு மரமாக நின்றுகொள்ள அவளின் மனம் விழைந்தது.
கொட்டும் மழையில் உடலில் ஓட்டியிருக்கும் கறையைக் கரைத்துவிட வேண்டுமென்று அவளின் உள்ளம் துடித்தது. ஆனால், உணர்வுகளை எல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு மழையை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள். அப்போது, காற்றில் பரவியிருந்த மண்ணின் மணம் அவளுடைய பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.
"சுடுசோறுலயிருந்து வர்ற மணம் இருக்கே அது அரிசியோட வாசமில்ல பொன்னுத்தாயி.. இந்த மண்ணோட வாசனை. கலப்பையால நிலத்தை உழும்போது வருமே அந்த மண்ணோட வாசனை. அதை முகர்ந்துகிட்டே சோத்தைப் பெசஞ்சு வாயில வைக்கும்போது கிடைக்கிற ருசியிருக்கே அதை அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்," என்று சொல்லிக்கொண்டே சூடான சோற்றை அவளுக்கு ஊட்டுவார். அப்பா ஊட்டுவதாலோ அல்லது அவரின் உணர்வுகளின் வெளிப்பாட்டினாலோ என்னவோ அந்தச் சோற்று உருண்டை அவளுடைய தொண்டைக்குள் ருசியாக இறங்கும்.
வாரத்தில் இரண்டு நாட்கள் இரவில் மட்டுமே அவர்கள் வீட்டில் அரிசி சோறு சமைப்பார்கள். மற்ற நாட்களில் பெரும்பாலும் கேப்பை ரொட்டியும், கம்பங்கூழும்தான்.
இவளுக்குச் சில சமயங்களில் கம்பங்கூழ் இறங்காது. கடையில் இட்லி வாங்கித் தரச் சொல்லிக் கேட்டு நச்சரிப்பாள்.
"வயசுப்புள்ள கம்பங்கூழு குடிச்சாதான் உடம்பு வலுவா இருக்கும். நாக்கு ருசிக்கு ஆசப்பட்டுக் கெடந்தா நாளைக்குப் புருஷன் வீட்டுக்குப்போய் இப்படி இருக்க முடியுமா?" என்று மனத்திற்குள் ஒலித்த அம்மாவின் குரலையும் தாண்டி தொலைபேசியின் ஒலி அவளை நனவுலகிற்கு அழைத்து வந்தது. வேகமாகச் சென்று எடுத்தாள்.
"பொன்மணி என்ன பண்ணுற? எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்"
"மழை பெய்யுதேன்னு சாளரத்தை மூடப் போனேம்மா. அப்படியே மழையைப் பார்த்துக்கிட்டு நின்னதுல சத்தம் கேக்கல"
"ஊர் நெனப்பு வந்தா நீ உலகத்தையே மறந்துடுற. ஆமா பிங்கி எப்படியிருக்கா? சாப்பிட்டாளா?"
"அப்படியேதாம்மா இருக்கா. எந்த மாற்றமுமில்ல. மத்தியானம் சாப்பாடு கொடுத்தேன். அப்பவும் சாப்பிடாம தலையை மட்டும் தூக்கிப் பார்த்துட்டு மறுபடியும் கண்ணை மூடிகிட்டா. அவ சரியா சாப்பிட்டு இரண்டு நாளாச்சு. அவளை மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போய் காண்பிக்கனும்."
"இன்னைக்கும் அவ சரியா சாப்பிடலையா? அப்படின்னா சாயந்தரம் நான் வந்ததும் அவளை மருத்துவர்கிட்ட அழைச்சுக்கிட்டு போறேன். அப்புறம் நீ சாப்பிட்டியா?"
"இன்னும் இல்லம்மா"
"மணி நாலாகப் போகுது. இன்னும் சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும். முதல்ல நீ போயி சாப்பிடு. அப்புறம் ஐயா என்ன பண்ணுறாரு?"
"தியாகு ஐயா வந்திருக்காரும்மா. அவருகூடச் செஸ் விளையாடிகிட்டு இருக்காரு"
"ஓ.. அப்படியா? சரி நாலு மணிக்கு ஐயாவுக்கு மருந்து தேய்ச்சுவிட்டுக் கையையும், காலையையும் மறந்துடாம நீவி விட்று. விளையாடுற சுவாரசியத்துல அவர் மறந்திடப் போறாரு," என்று அவர் சொல்லும்போதே அவளுக்கு உடலெங்கும் பூரான்கள் ஊர்வது போன்று இருந்தது
"சரிம்மா" எனும்போது அவள் குரலே அவளுக்குக் கேட்கவில்லை.
அதன் பின் அவளுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. வாழ்க்கையோட்டத்தில் மாறிப்போன தன் விதியை நினைத்து அவளுக்குத் துக்கம் பீறிட்டது. ஆனால் அந்தத் துக்கத்தை வெளிப்படுத்தும் கண்களில் கண்ணீர் வற்றிப்போய் நாட்கள் கடந்துவிட்டன.
இப்போது வறண்டுபோன அவள் வாழ்க்கையில் எஞ்சி நிற்பது நினைவுகள் மட்டுமே. அந்த நினைவுகள் தரும் நிம்மதியில் மட்டுமே அவள் வாழ்க்கை கடந்துபோகிறது.
*
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த பள்ளிக்காலங்கள் அவள் மனத்தில் இன்றும் பசுமையாய் படர்ந்து நிற்கின்றது. எந்தவொரு கவலையுமின்றி நண்பர்களோடு ஆடிப் பாடி மகிழ்ந்த தருணங்கள் அவை. அதிலும் மழையில் நனைவது என்பது சிறு வயதிலிருந்தே அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
இடி, மின்னல், காற்றுடன் ஆர்ப்பாட்டமாக வருகின்ற மழையை விட எந்தவித சத்தமும் இல்லாமல் நின்று நிதானமாகப் பெய்கின்ற மழையை மட்டுமே அவள் விரும்புவாள்.
அப்படி மழை பெய்ய ஆரம்பித்தால் வெளியே ஓடிப்போய் நின்று கொள்வாள். இரண்டு கைகளையும் அகல விரித்துத் தலையைத் தூக்கி அண்ணாந்து பார்த்து, கண்களை மூடிக்கொண்டு தெறிக்கும் மழைத்துளிகளை முகத்தில் ஏந்தி நிற்பாள்.
வாழ்க்கை முழுமைக்குமான மகிழ்வை அந்த ஒரு கணத்தில் அடைந்துவிட்டாற் போன்ற உணர்வு அவளுக்குள் மேலிடும். அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் கடவுளே அவளை ஆசீர்வதிப்பதுபோல் உணர்வாள். அப்போது யார் கத்தினாலும் அவள் காதில் விழாது. எதையும் பொருட்படுத்தாது 'கரகர'வென்று சுற்றிக்கொண்டே மழையில் ஆனந்தமாக நனைவாள்.
"ஏலே பொன்னம்மா! போதும் தாயி. மழையில நனைஞ்சு சளி பிடிச்சுச்சுனா அப்புறம் பள்ளிக்கூடம் போகமுடியாது," என்று அப்பாவின் குரலைக் கேட்ட பிறகுதான் தலையைத் திருப்பிப் பார்ப்பாள். முதலில் அப்பா. பிறகு பள்ளிக்கூடம். இந்த இரண்டு வார்த்தைகளும் அவளை அசைத்துப் பார்க்கும்.
போகலாமா? வேண்டாமா? என்று யோசனையோடு நிற்பவளை
"நீ வரலைன்னா நான் வந்துடுவேன்," என்ற வரிகளில் அடங்கிப்போய் வீட்டிற்குள் திரும்புவாள். அவள் அப்பாவிற்கு ஆஸ்துமா இருப்பதால் குளிர்க்காற்றே ஆகாது. இதில் மழையில் நனைந்தால் என்ன ஆகும் என்று அவளுக்குத் தெரியும். அதனால் அப்பாவை எதிர்க்கமுடியாமல் வீட்டிற்கு வந்துவிடுவாள். வந்தவளைத் தாவிப் பிடித்து முதலில் தலையைத் துவட்டி விடுவார். பின்னர், தலையை உலர்த்திச் சாம்பிராணிபோட்டு காய வைத்த பிறகுதான் அவளை விடுவார். அப்போது அவளின் அம்மா, "பொண்ணுக்கு இத்தனை செல்லம் கொடுத்து வளர்க்குறது நல்லதுக்கில்ல. கொஞ்சமாவது அடங்குறாளா? மழையில ஆடுறது, ஆத்துல போயி குதிக்கிறதுன்னு ஆம்பள புள்ள மாதிரி திரியுறா. கொஞ்சமாவது பொட்ட புள்ளன்னு அடக்க ஒடுக்கமா இருக்காளா? எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம்தான்," என்று இரைவார்.
ஆனால், அவளோ அவர் சொல்வது எதுவும் கேட்காததுபோல் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிடுவாள்.
அவள் படிக்க ஆரம்பித்தால்போதும் அம்மாவும் கத்துவதை நிறுத்திவிடுவார்.
படிப்பு என்றால் அவளுக்கு உயிர் என்பது மட்டுமல்ல படிப்பில் கெட்டிக்காரியாகவும் இருந்தாள். தன்னால் முடியாததைத் தன் மகளாவது செய்கிறாளே என்ற பூரிப்பு அவருக்குள் எப்போதும் உண்டு.
ஆகையால், அவள் படிக்கத் தொடங்கினால் அவர் திட்டுவதை நிறுத்திவிடுவார்.
அவர்கள் ஊரில் பத்தாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம் இருந்தது. மேல் வகுப்பு படிக்கவேண்டும் என்றால் அதற்கு ஐந்து கிலோமீட்டர் நடந்து பக்கத்து ஊருக்குச் சென்று படிக்க வேண்டும். அவள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.
காலையில் சீக்கிரமாக எழுந்து அப்பாவுடன் வயலுக்குச் சென்றுவிட்டு பள்ளிக்குச் சென்று விடுவாள். அதுபோல் மாலை வீட்டிற்கு வந்ததும் பள்ளிப்பாடத்தை முடித்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பாள்.
படித்து ஒரு மருத்துவராக வரவேண்டும் என்பது அவள் விருப்பமாக இருந்தது. காரணம் அவளுடைய அப்பா ஆஸ்துமா கோளாறினால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார்.
அவர்கள் கிராமத்தில் மருத்துவமனை இல்லாததால் பக்கத்து ஊருக்குச் சென்று வைத்தியம் பார்த்து வந்தார். ஆகையால் மருத்துவராகித் தன் கிராமத்திலேயே ஒரு மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பது அவள் கனவாக இருந்தது.
அந்தக் கனவு தண்ணீரில் எழுதிய கோலம்போல் கலைந்து போகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
இப்பொழுதெல்லாம் வருகின்ற நோய் ஏழை பணக்காரன் என்று பார்த்தா வருகிறது?
அடிக்கடி உடல்நலக்குறைவினால் அப்பாதான் அவதிப்பட்டு வந்தார். ஆனால், நன்றாக இருந்த அம்மா திடீரென்று இரத்த வாந்தி எடுத்தபோது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இரத்த புற்றுநோய் என்று தெரிந்தது. அதுவரை ஒழுங்காகச் சென்றுகொண்டிருந்த அவளின் வாழ்க்கை வண்டி தடம் புரண்டது.
அம்மாவால் முன்புபோல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை. அம்மாவைப் பார்த்துக்கொண்டு தம்பி, தங்கைகளுக்குச் செய்ய வேண்டிய நிலை வந்ததால் அவள் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். தன்னால் தன் மகளின் படிப்பு பாழானதை எண்ணி அவள் தாயார் கண்ணீரை உகுக்காத நாளில்லை.
இந்நிலையில் அம்மாவின் சிகிச்சைக்காக அவர்களிடமிருந்த விவசாய நிலம் அடமானத்துக்குப் போனது. மண்ணை மறக்க இயலாது சில வருடங்களில் அப்பாவும் கண்ணை மூடிவிட நொறுங்கிப் போனாள். அஸ்திவாரமாய் நின்ற அப்பாவின் இழப்பு அவளை மட்டுமல்ல அவளுடைய குடும்பத்தையும் ஆட்டம் காணச் செய்தது. வயல் வேலைக்குச் சென்றாள். கிடைத்த சொற்ப வருமானம் குடும்பத்தை நடத்துவதற்குப் போதுமானதாக இல்லாதபோது அம்மாவின் வைத்திய செலவை அவளால் சமாளிக்க முடியவில்லை. அரை வயிறும் கால் வயிறுமாகக் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்த காலத்தில்தான் எழிலரசியைச் சந்தித்தாள்.
வாத நோயால் இடது கை செயலிழந்த நிலையிலிருந்த முத்தரசனுக்கு நாட்டு வைத்தியம் பார்க்க சிங்கப்பூரிலிருந்து அவளின் ஊருக்கு வந்திருந்தார்.
முத்தரசனைப் பார்த்துக்கெள்வதற்கும் வீட்டு வேலைக்கும் ஆள் தேடியபோது பொன்மணி அந்த வேலையை ஒப்புக்கொண்டாள்.
தன் தந்தைக்குச் செய்வதுபோல் அவருக்குத் தேவையான வேலைகளைச் சிரத்தையுடன் செய்தாள். மூன்று மாதம் சிகிச்சை முடிந்த பிறகு பொன்மணியின் வேலை நேர்த்தி அவருக்குப் பிடித்துப்போக அவளை சிங்கப்பூருக்கு அழைத்தார்.
அவளுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் குடும்பச்சூழல் அவளை ஒப்புக்கொள்ளச் செய்தது. எழிலரசியும் அவளின் குடும்பச்சூழல் தெரிந்து அவளுக்குத் தேவையான பண உதவிகளைத் தயங்காமல் செய்து வந்தார்.
தன்னுடைய ஆசைகளை எல்லாம் பொட்டலமாகக் கட்டி ஊரில் வைத்துவிட்டுக் குடும்பப் பாரத்தைப் பெட்டியில் சுமந்துகொண்டு சிங்கப்பூருக்குக் கிளம்பினாள்.
எல்லாவற்றையும் சுருட்டி வைத்துவிட்டு கிளம்பியவளை மழை மட்டும் ஒதுக்கவில்லை.
அவளுடைய எல்லா நிகழ்வுகளிலும் அவளோடு தொடர்ந்து பயணித்தது.
அவளுடைய அம்மாவிற்கு உடல் நிலை குன்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அப்பாவின் இறுதிப் பயணத்தின்போதும் என்று மழைக்கும் அவளுக்குமான பந்தமானது நிழல்போல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், அவளோ அதன் பிறகு தாமரை இலைத் தண்ணீர்போல் மழையோடு ஒட்டாமல் ஒதுங்கி நின்றாள்.
எழிலரசியின் மகன் ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டு இருந்ததால் அவர்கள் நடத்தி வந்த சிறிய நிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் எழிலரசி கவனித்து வந்தார். ஆகையால், சிங்கப்பூருக்கு வந்தவுடன் ஊர் புதிது என்றாலும் பழகியவர்களுடன் இருந்ததால் அவளால் எளிதில் சமாளிக்க முடிந்தது.
மூன்று பேருக்குச் சமைப்பது என்பது அவளுக்குப் பெரும் சுமையாக இல்லை.
எனவே, முத்தரசனுக்குத் தேவையானதைச் செய்வதில் மட்டுமே பெரும்பான்மையான நேரத்தை அவள் செலவிட்டாள்.
அவளுடைய தொடர் கண்காணிப்பில் அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவருடைய சொந்த வேலைகளை அவராகப் பார்த்துக்கொள்ளக்கூடிய வகையில் அவருடைய கையின் இயக்கம் முன்னேற்றம் அடைந்தது.
ஆரம்பத்தில் அவளிடம் மரியாதையாக நடந்துகொண்டவரின் போக்கில் சில நாட்களாகச் சிறு மாற்றம் தென்பட தொடங்கி இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அவரைப் பார்க்க அவரின் நண்பர் தியாகு எப்போதாவது வருவார். ஆனால், சில வாரங்களாக அவர் தினமும் வருவது தொடர்கதையாகிவிட்டது. அதற்குப் பின்பு முத்தரசனின் பார்வையும் அவர் நடந்துகொள்ளும் போக்கும் மாறிவிட்டது. இருவரும் விளையாடுவது செஸ் என்றாலும் பேச்சு முழுக்க இரட்டை அர்த்தத்தில் இருக்கும். மருந்து தேய்த்து விடும்போது அவரின் கை ஆங்காங்கே அவள் மீது படும். தியாகுவோ அவளிடமிருந்து பார்வையை நகர்த்தமாட்டார். அப்பொழுதெல்லாம் கூரையில் பட்ட நெருப்புபோல அவள் உடம்பு திகுதிகுவென்று எரியும். அப்பாவிற்குச் செய்வதுபோல் எந்தவொரு அசிங்கமும் படாமல் இதுவரை பார்த்துக்கொண்டவளுக்கு இப்போது அவர் அருகில் செல்வதற்குக்கூட அருவருப்பாக இருக்கிறது.
அனுதினமும் அனுபவிக்கும் இந்த வேதனையை யாரிடமும் சொல்ல முடியாது மனத்திற்குள் மருகுவாள்.
அந்தச் சமயத்தில் அவளுக்கு வடிகாலாய் இருப்பது பிங்கி மட்டுமே.
அவளுடைய ஆதங்கத்தை எல்லாம் பிங்கியிடம்தான் கொட்டுவாள். அதுவும் காதை விறைப்பாக வைத்துக்கொண்டு கேட்கும். சில வேளைகளில் அவள் சொன்னது புரிந்ததுபோல லேசாகக் குரைத்துக் காட்டும்.
மாறிப்போன தன் வாழ்க்கை நிலையை எண்ணிக்கொண்டு அவள் உண்ண அமர்ந்தபோது கடிகாரத்தில் இருக்கும் குயில் தலையை நீட்டி 'குக்கூ.. குக்கூ' என்று நான்கு முறை கூவ ஏனோ பிரியாணியின் மணம் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.
வெளியே மழையும் வலுக்கத் தொடங்கியது.