தான் அறிந்த மொழிகளில்
தமிழ்தான் அழகென்றார் பாரதி...
இன்றிருந்தால் சொல்லியிருப்பாரோ
சிங்காரத் தமிழ் வளர்ப்பதால்
தான் அறிந்த தேசங்களில்
சிறந்தது சிங்கை என்று...
சங்க காலத்துப் புலவர்
கணியன் பூங்குன்றனார்
அன்றே சொன்னார்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
இன்றிருந்தால் சொல்லியிருப்பாரோ
சிங்கைதான் அதற்கேற்ற
எடுத்துக்காட்டென்று...
'ஒப்புரவு ஒழுகு, ஊக்கமது கைவிடேல்'
ஆத்திசூடி அவ்வையார்
அழகாகச் சொன்னார்
இன்றிருந்தால் சொல்லியிருப்பாரோ
சிங்கைதான் தட்டாமல்
தன் சொல் கேட்டதென்று...
'இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு'
வள்ளுவர் வாய்மொழிந்த
பொய்யாமொழி இது
வள்ளுவப் பெருந்தகை
இன்றிருந்தால் சொல்லியிருப்பாரோ
சந்தேகமில்லை - சிங்கை
அரசு செய்வது சரியென்று...
இன்றிருப்பதால் நானே சொல்லுகிறேன்
நன்றாய் நான் இருப்பதால் அல்ல…
உலக நடப்புகள் நன்கறிந்து
உளமாரச் சொல்லுகிறேன்
சிங்கை சீர்பொருந்திய நாடென்று...
பல்லாயிரம் ஆண்டுகள் வாழும்
செந்தமிழ் போல்
சிங்கையும் நீடூழி வாழ்கவென்று
வாழ்க... வென்று...
- மோ.அ.சூசைதாசன்