- பனசை நடராஜன்
பொறுமையின் விளிம்பிற்கே
துரத்தப்பட்டாலும்
தொடர்கிறது புன்னகை..
மற்ற எவையும்
துன்பப்படுத்துவதில்லை
மனிதரைப் போல்..
ஆலை, வாகனக்
கழிவுப் புகையால்
சுவாசத் திணறலும்
ஓசோன் கிழிசலும்...
ஆடை களையும்
துச்சாதனனாய்
காடுகளை அழிக்கும் அவலம்..
அங்கங்கே சிகரெட்டால்
சுடுகின்ற வக்கிரத்தோடு
அணுகுண்டுச் சோதனைகள்..
இயற்கைச் சீற்றத்தால்
அவ்வப்போது
எச்சரிக்கை செய்துவிட்டு,
உயிர்க்காற்று தர மரங்களாய்,
பயிர் வளரச் செய்யும் நதிகளாய்
நிரந்தரமாய் தொடர்கிறது
நிலமகள் என்ற
அழகி(யி)ன் சிரிப்பு..!