பாலைவனத்தில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் இருப்பதன் காரணம்
பாலைவனப் பகுதியில் வீசும் காற்றில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு காணப்படும். சூரியனின் வெப்பத்தையும் கதிர்வீச்சையும் தடுத்து நிறுத்துவதற்கு மேகங்களும் இருப்பதில்லை. எனவே வெப்பம் நேரடியாகப் பாலைவன மணலில் விழுகிறது. மணல் சூடாகச் சூடாக வெப்பமும் அதிகரிக்கிறது. வெப்பத்தைப் போலவே குளிரும் பாலைவனத்தை நேரடியாகத் தாக்குகிறது. சூரியன் மறைந்ததும் மணல் வேகமாக வெப்பத்தை வெளியேற்றிவிடுகிறது. அதனால், பாலைவனங்களில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் காணப்படுகிறது.
வாகனங்களுக்கு எண்ணெய் நிரப்பும்போது ஏன் கைத்தொலைபேசி பயன்படுத்தக்கூடாது?
கைத்தொலைபேசிகள் மின்காந்த அலைகளைக் கடத்துகின்றன, பெறுகின்றன. இந்த மின்காந்த அலைகள் மின்னோட்டத்தைத் தூண்டி, மின் தீப்பொறியை உருவாக்கலாம் என்பதால், எரிபொருள் நிறைந்திருக்கும் பெட்ரோல் நிலையத்தில் கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதனால், பெட்ரோல் நிலையத்தில் எண்ணெய் நிரப்பும் ஒரு சில நிமிடங்கள் வாகனத்தில் இருப்பவர்கள் கைப்பேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதுதானே சிறுவர்களே!

