மலேசியா (கோலாலம்பூர்): மலேசியாவின் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ், கடந்த திங்கட்கிழமை வரை, மொத்தம் 409,784 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், 609,153 பேருக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டது என்று மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்துள்ளார்.
இதுவரையில் அங்கு முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,018,937 ஆகும்.
இவற்றில் சிலாங்கூர், பேரா, சரவாக், கோலாலம்பூர், பினாங்கு ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தேசிய தடுப்பூசி திட்ட முதல் கட்டத்தில், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, சுகாதார ஊழியர்கள் உட்பட, ஐந்து லட்சம் முன்நிலை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்குவது திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டத்தில் (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை), 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அபாய நோய் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 940,000 பேருக்கு தடுப்பூசி ஒதுக்கப்படும்.
இவ்வாண்டு மே மாதம் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரையில், திட்டத்தின் மூன்றாம் கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்பட, 40 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என நம்பப்படுகிறது.