தன்னை மலேசியர் என்று குறிப்பிட்ட ஒரு பெண், மலேசியாவின் தேசிய கீதம் பாடத் தெரியாததால் குடிநுழைவு அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண், பினாங்கில் மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்படுவதிலிருந்து தப்பிக்க, தாம் ஒரு மலேசியர் என்று குறிப்பிட்டார்.
ஜுரு டோல் பிளாசாவில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் சிக்கிய அந்த 21 வயதுப் பெண், தன்னுடைய அடையாள அட்டை அம்மாவிடம் இருப்பதாகவும் தனது அடையாள அட்டை எண் மறந்துபோனது எனவும் பல பொய்களைச் சொல்லி அதிகாரிகளைச் சரிக்கட்ட முயன்றார். மேலும் அல்மா பகுதியில் வசிப்பதாகவும் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்ததாகவும் அதிகாரிகளிடம் கூறிய அந்தப் பெண் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை.
தனது ஆண் நண்பருடன் நேற்று (நவம்பர் 19) காரில் பயணம் செய்த அந்தப் பெண் அதிகாரிகளின் விசாரணைக்குட்பட்டார். அவர்கள் பயணம் செய்த காரின் எண் அட்டை விதிமுறைகளுக்கு உட்படவில்லை என்பதால் அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்தனர்.
இறுதியில், அதிகாரிகள் அந்தப் பெண்ணை மலேசியாவின் தேசிய கீதம் பாடச் சொன்னதாகவும் அந்தப் பாடலைப் பாட இயலாத நிலையில் அவர் மலேசியர் இல்லை என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பினாங்கு குடிநுழைவு இயக்குநர் முகமது ஹுஸ்னி முஹ்முட் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில் இந்தியர்கள் இருவர், மியன்மார் நாட்டவர் மூவர், இந்தோனீசியப் பெண் ஒருவர் என அறுவர் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறினார். 25 முதல் 40 வயதுக்குட்பட்ட அவர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்று கூறப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity