தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள மலாக்கா சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதனின் மனைவி போலிசாருக்கு எதிராகப் பல புகார்களை தெரிவித்துள்ளார். வி. உமாதேவி என்னும் அந்தப் பெண்மணி நேற்று முன்தினம் மலேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு வந்திருந்தார்.
நான்கு மாத கர்ப்பிணியான திருமதி உமாதேவி, 31, அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். தமது கணவரை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்க வேண்டுமானால் விருந்து வைக்க வேண்டும் என போலிஸ் அதிகாரி ஒருவர் கேட்டதாக அவர் கூறினார். லஞ்சத்தைத்தான் மறைமுகமாக அவ்வாறு கூறுகிறார் என கருதினேன்.
“எனது கணவரை விடுவிக்கக்கோரி புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்திற்கு வெளியே பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தேன். தீபாவளிக்கு முதல் நாள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தபோது ‘பிரைவேட் நம்பர்’ என கைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆடவர் தாம் ஒரு போலிஸ் அதிகாரி என்றும் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் என்றும் கூறினார். தீபாவளிக்கு முன்னர் எனது கணவரை விடுவிக்க வேண்டும் என்றும் அவரைப் பார்க்க வேண்டும் என்றும் கூறினேன். அப்போதுதான் தமக்கு விருந்து வைக்கவேண்டும் என்றும் அது பெரிதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“எவ்வளவு பெரிதாக ஏற்பாடு செய்ய முடியும் என்று யோசித்து வைக்குமாறு கூறிய அவர் பத்து நிமிடங்களுக்குப் பிறகு அழைத்தார். அவர் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. 12 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும்போது எனது கணவரை மட்டும் அவரால் எப்படி விடுவிக்க முடியும்.,” என்று உமாதேவி கூறினார்.
ஆனால் அந்த அழைப்பை செய்தவர் போலிஸ் அதிகாரியாக இல்லாமல் மர்ம நபராக இருக்கலாம் என அந்தப் பெண்ணிடம் கூறப்பட்டது. ஆனால் இதுபோல பல அழைப்புகள் தமது குடும்பத்தினருக்கும் வந்துகொண்டு இருப்பதாக அவர் கூறினார்.
திரு சாமிநாதனின் உதவியாளர் கே. ஜெயசுதாவும் செய்தியாளர்களிடம் பேசினார். போலிஸ் சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு ஒருவர் தம்மை அழைத்து சாமிநாதனுக்கு சாதகமாக சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கருத்துகளை நீக்குமாறு கூறியதாகத் தெரிவித்த அவர் அதன் பின்னர் தாம் அச்சமுற்றதாகக் கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் திரு சாமிநாதனுடன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரனும் மேலும் 10 பேரும் அக்டோபர் முதல் வாரம் சோஸ்மா சட்டத்தின்கீழ் கைதாகினர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity