மலேசிய நாடாளுமன்றத்தில் திருநீறு தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பிய இரு எம்.பி.க்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தேசிய முன்னணியைச் சேர்ந்த பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுதீன் அப்துல் ரஹ்மானும் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போயய் டியோங்கும் இரு நாட்களுக்கு அவைக்கு வரக்கூடாது என்று நாடாளுமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பக்கத்தான் ஹரப்பானின் பிரபல தலைவர்கள் கர்ப்பால் சிங், லிம் கிட் சியாங் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி மாணவர்களுக்குச் சொல்லித் தரும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் உண்டா என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக்கைப் பார்த்து ஆளும் கூட்டணியின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் இன்று வினா எழுப்பினார்.
அதனை சில உறுப்பினர்கள் வேடிக்கையாக எடுத்துக்கொண்டனர். ராயரை நோக்கி தாஜுதீன், “சின் பெங்கின் அஸ்தி எப்படி? உங்கள் நெற்றியில் அதனை திருநீறாகப் பூசி உள்ளீர்களா?,” என்று கேட்டார். அவரது இந்தக் கேள்வி அவையில் பெரும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் எதிரெதிராகக் கூச்சல் எழுப்பினர்.
பின்னர் ராயர் பேசுகையில், “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் கேள்வி என்பதால் தாஜுதீன் அதனை மீட்டுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
அவைத் தலைவர் முகம்மது ஆரிஃப் முகம்மது யூசோப் ஏன் இவ்விவகாரத்தில் தாஜுதீன் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் என புக்கிட் கெலுகார் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பார் சிங் கேட்டார்.
இதற்கிடையே, தமது கேள்வியை திரும்பப் பெறுவதாக தாஜுதீன் அறிவித்துவிட்டதாக இஸ்மாயில் முகம்மது என்னும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
அச்சமயத்தில் குறுக்கிட்ட கூ போயய், தாஜுதீன் இதுபோல பல தடவை புண்படும்படியான வாதங்களை வைத்துள்ளதாகக் கூறினார். பின்னர் தமது நடவடிக்கையை அறிவித்த மன்ற நாயகர், தாஜுதீனையும் கூ போயயையும் இரு நாட்களுக்கு அவையிலிருந்து நீக்குவதாகக் கூறினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity