சிறுமி ஒருவரை கூரான பொருளைக் கொண்டு குத்திவிடப்போவதாக பெண் ஒருவர் மிரட்டுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அந்தக் காணொளியில் மிரட்டப்படும் சிறுமியை மலேசிய போலிசார் காப்பாற்றியுள்ளனர்.
(இந்தக் காணொளியை முழுமையாகப் பார்க்க 'full screne mode' உதவும்)
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பரவிய ஒரு நிமிடம் 16 வினாடிகளுக்கான அந்தக் காணொளியில் பெண் ஒருவர் கத்திரிப்பூ வண்ண உடையில் தரையில் அமர்ந்திருப்பதும், தரையில் அமர்ந்து சுவர் ஒன்றின் மீது சாய்ந்திருக்கும் ஒரு சிறுமியை நோக்கி கூரான பொருளை நீட்டியிருப்பதும் தெரிகிறது.
“நீ எனது குழந்தை இல்லை. நான் உன்னைப் பெறவில்லை,” என்று அந்தப் பெண் தமிழில் பேசுவதும் கேட்கிறது.
சிறுமியின் தந்தையின் பொருட்டே தாம் சிறுமியைக் கவனித்துக் கொள்வதாகக் கூறும் அந்தப் பெண், சிறுமியைக் குத்திவிடப் போவதாக மிரட்டுவதும் அதில் தெரிகிறது.
மிகுந்த அதிர்ச்சியில் இருக்கும் அந்தச் சிறுமி, ஒவ்வொருமுறை அந்தப் பெண் குத்தப்போவதாக மிரட்டும்போது ஒடுங்கிப்போவதையும் காண முடிகிறது.
இந்த சம்பவம் மலேசியாவின் ஜின்ஜாங் பகுதியில் உள்ள ஸ்ரீ அமான் அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று (டிசம்பர் 7) நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தக் காணொளி பரவிய சிறிது நேரத்துக்குள்ளாகவே, காணொளியில் காணப்பட்ட அந்தப் பெண் விலங்கிடப்பட்டவாறு பெண் போலிஸ் ஒருவருடன் செல்வதைக் காட்டும் காணொளியும் வெளியானது.
மிரட்டப்பட்ட அந்தச் சிறுமி காப்பாற்றப்பட்டதாக போலிஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
நகர பாலியல், பெண்கள், குழந்தை விசாரணைப் பிரிவில் அந்தப் பெண் விசாரிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity