"பொதுச் சட்டத்தின்படி தாம் எஸ்.சாமிவேலுவின் மனைவி," என்று கூறும் மரியம் ரொசலின் எட்வட் பால், திரு சாமிவேலுவை எந்நேரமும் பார்க்க அனுமதி வேண்டும் என்று தொடுத்த வழக்குக்கான விசாரணை, உயர் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமது பராமரிப்புக்காக மாதம் 25,000 ரிங்கிட் வழங்கப்படவேண்டும் என்றும் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் மரியம் கோரியிருந்தார்.
மலேசிய இந்தியர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் மலேசிய முன்னாள் பொதுப்பணி அமைச்சருமான திரு எஸ்.சாமிவேலுவுக்கும் தமக்கும் பொதுச் சட்டத்தின்படி கோலாலம்பூரில் 1981ஆம் ஆண்டில் திருமணம் நடந்ததாகக் கூறுகிறார் மரியம்.
இதற்கிடையே சாமிவேலு மனநலம் பாதிக்கப்பட்டவரா என்றும் அவரால் தம்முடைய சொந்த விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள முடியுமா என்றும் கண்டறியவேண்டும் எனக் கோரி, அவருடைய மகன் எஸ்.வேள்பாரி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவின்படி, 82 வயதான தம் தந்தை திரு சாமிவேலுவின் மனநிலை குன்றியுள்ளதா என்பதை மனநலச் சட்டம் 2001, பிரிவு 52ன் கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்திக் கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
திரு சாமிவேலுவுக்கு முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு காரணமாக ஞாபக மறதி நோய் உள்ளதாகவும் மகன் கூறியுள்ளார். இதற்கிடையே வேள்பாரி தாக்கல் செய்திருந்த மனுவின்படி மரியம் தொடுத்திருந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கடைசியாக ஜூன் 13ஆம் தேதியன்று கோலாலம்பூர் உணவகம் ஒன்றில் சாமிவேலுவைச் சந்தித்ததாக இன்று நீதிமன்றத்திற்கு வெளியே மரியம் கூறினார்.
“முன்பைப் போல அவர் வீட்டுக்கு வரவேண்டும் என்பதே என் ஆசை. அவர் கூறியதுபோல் என்னை அவர் கவனித்துக்கொள்ளவேண்டும். அவரையே முழுமையாக நம்பி இருக்கும் நான், இப்போது என்ன செய்வது?” என்றார் அவர்.
கடந்த 38 ஆண்டுகளாக திரு சாமிவேலுவின் மனைவியாக வாழ்ந்து வந்ததாகக் கூறும் மரியம், அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஒத்தி வைக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணை அடுத்த மாதம் 17ஆம் தேதியன்று தொடரும் என்று மரியமின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity