போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயைக் கட்டுப்படுத்த மலேசியா பெருமுயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது உறுதி செய்யப்படும் என்றார் அவர். மானிய விலையில் தடுப்பூசியைப் பெற ‘யுனிசெஃப்’ எனப்படும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பின் ஒத்துழைப்பை அமைச்சு நாடும் என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.
போலியோவைத் தடுக்க சொட்டு மருந்து ஊட்டும் வழக்கத்தை 2008ஆம் ஆண்டு மலேசியா கைவிட்டு தடுப்பூசியைப் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக சாபாவில் குடியேறியோருக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கப்படும் என்றார் டாக்டர் நூர். அண்மையில் அங்கு 23 குழந்தை களுக்கு தடுப்பூசி போடப்பட்டது என்றார் அவர். மேலும் குறைந்த செலவிலான சிகிச்சையை வழங்க பிலிப்பீன்சுடன் இணைந்து பணியாற்றும் திட்டமும் இருப்பதாக டாக்டர் நூர் கூறினார்.
அண்மையில் சாபா மாநிலத்தில் மூன்று மாத ஆண் குழந்தை இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டது. அந்நோய்க்கான கிருமி வெளிநாட்டிலிருந்து பரவி வந்திருக்கலாம் என சுகாதார அமைச்சு சந்தேகத்தை வெளிப்
படுத்தி இருந்தது.
பிலிப்பீன்ஸில் இருந்து நோய்க்கிருமி ஊடுருவி இருக்க வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் வெளிநாட்டில் இருந்தபோது அவர்களுக்குக் கிருமித் தொற்று ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கூறியிருந்தார்.
மலேசியா போலியோ நோயிலி ருந்து மீண்ட நாடு என 27 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது நோய் அச்சம் தோன்றி உள்ளது.