மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
ஆகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம் மெர்சிங். வீடுகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் மெர்சிங் குடியிருப்பாளர்கள் 1,262 பேர் அடைக்கலம் நாடினர். அவர்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 4,000 பேர் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 53 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இன்னொரு மாவட்டமான கோத்தா திங்கியில் 1,071 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
குளுவாங்கில் 1,053, சிகமாட் டில் 342, கூலாயில் 80, மூவாரில் 21, பத்து பகாட்டில் 6 என பலரும் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ள நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக ஜோகூர் பேரிடர் நிர்வாகக் குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக கோத்தா திங்கியில் கம்போங் துஞ்சக் டாலாம், ஜாலான் டாலாம் கம்போங் மாவாய் லாமா ஆகிய சாலைகள் மூடப்பட்டுவிட்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
இந்நிலையில் ஜாலான் கோத்தா திங்கி-மெர்சிங் இடையில் பத்து 18 சாலை, வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாகக் கூறிய காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்மான் பாஜா, அந்த சாலையில் சென்ற பேருந்து ஒன்று பழுதடைந்து வெள்ளத்தில் சிக்கி நின்றுவிட்டதாகவும் கூறினார்.
இருப்பினும் இந்த சம்பவத்தால் உயிருடற்சேதம் எதுவுமில்லை என்றார் அவர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு மாநிலமான சரவாக்கில் உள்ள மக்கள், சமைக்க இயலாமல் பசியில் வாடுவதாக ‘மலேசியா கினி’ செய்தித்தளம் தெரிவித்துள்ளது. சமையலுக்கான எரிவாயு உருளைகள் காலியாகிவிட்டதாலும் விறகுகள் மழையில் நனைந்துவிட்டதாலும் அவர்களால் சமையல் செய்ய இயலவில்லை என்று அச்செய்தி கூறியுள்ளது.
தொலைதூர கோலா தூத்தோ கிராமத்தில் வசிக்கும் லகிபுத் இனத்தைச் சேர்ந்த 500 பேர் தப்பிக்க வழியின்றி தவிக்கின்றனர். 0.7 மீட்டர் வெள்ள நீரில் தத்தளிக்கும் அவர்கள் நகர்ப் பகுதிக்கு வரவேண்டும் என்றால் குறைந்தபட்சம் படகில் ஆறு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில் அவ்வாறு பயணம் செய்வது கடினம் என்பதால் அவர்கள் அனைவரும் செய்வதறியாது தவிக்கின்றனர்.
வெள்ளம் கிளந்தானையும் விட்டு வைக்கவில்லை. இடை
விடாமல் பெய்யும் மழையால் பெருகிய வெள்ளத்தில் தமது வீடு சிக்கிக்கொண்டதாக கம்போங் கூபோங் கிராஞ்சியைச் சேர்ந்த ஒரு பெண் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் கிளந்தானைப் புரட்டிப் போட்டது. சுனாமியைப்போல சீற்றம் கொண்ட மழையாலும் வெள்ளத்தாலும் ஏராளமான வீடுகள் நாசமாயின.
கிராமங்களோடு சேர்ந்து நகரங்களும் அப்போது பாதிக்கப்பட்டன. குறிப்பாக, கோலா கிராய் மாவட்டம் பலத்த பாதிப்புக்கு ஆளானது.