கோலாலம்பூர்: மலேசியாவின் கிழக்கு மாநிலங்களான கிளந்தானிலும் திரெங்கானுவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது
நேற்றிலிருந்து கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் தற்காலிகத் துயர்த் துடைப்பு மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று காலை கிளந்தானில் 1,205 குடும்பங்களைச் சேர்ந்த 4,065 பேர் துயர்த் துடைப்பு மையங்களில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் 3,575 பேர் அங்கு தங்கியிருந்தனர்.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் ஜெலி. அங்கு 1,969 பேர் 12 துயர் துடைப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தானா மேராவில் 1,211 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 22 துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். திரெங்கானுவில் நேற்று முன்தினம் 88ஆக இருந்த பாதிப்படைந்தோர் எண்ணிக்கை நேற்று 129ஆக உயர்ந்தது.
செத்யு, கம்போங் லங்காப்பில் சுங்கை நெருஸ், கோலா ஜெங்காயில் சுங்கை டுங்குன், ஹுலு திரெங்கானுவில் சுங்கை தெலிமோங் ஆகியவற்றில் நீர்மட்டம் அபாய எல்லையைத் தாண்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஹாங்கில் ரொம்பின், தெமர்லோ, பெரா மாவட்டங்களில் 1,071 பேர் துயர்த் துடைப்பு மையங்களில் தங்கி உள்ளனர்.
ஜோகூரில் 716 குடும்பங்களைச் சேர்ந்த 2,669 பேர் நேற்று காலை 8 மணிக்கு 43 துயர் துடைப்பு மையங்களில் இருந்தனர்.
இந்நிலையில், ஜோகூர் முதலமைச்சர்் டாக்டர் ஸருதீன் வெளிநாடு சென்றிருந்தாலும் அம்மாநிலத்தின் வெள்ள நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என அவரது அலுவலகம் நேற்று தெரிவித்தது.
ஜோகூரில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ள வேளையில் முதலமைச்சர் எகிப்து, ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருப்பதைப் பலரும் குறைகூறியிருந்தனர்.
அப்பயணம் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்தது. பயணத்துக்கு முன் ஸருதீன் பல துயர்த் துடைப்பு மையங்களுக்குச் சென்றதாகவும் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளை ஜோகூர் தீ அணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் யாஹ்யா மடிசுடன் ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டதாகவும் அது கூறியது.