வெட்டுக்கத்தியைக் காட்டி போலிசாரை மிரட்டிய லாரி ஓட்டுநரை போலிசார் கைது செய்துள்ளனர்.
மாஞ்சுங் மாவட்டத்தில் உள்ள செரி மாஞ்சுங் பகுதியில் அதிகாலை வேளையில் மோட்டார்சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலிஸ் அதிகாரி, ஓர் உணவகத்தில் இரும்புப் பொருட்களை லாரி ஓட்டுநர் ஒருவர் திருடுவதைக் கண்டார்.
போலிசாரைக் கண்டதும் தனது லாரியில் ஏறிய அந்த ஆடவர் அங்கிருந்து தப்பி ஓடியதாக மாஞ்சுங் மாவட்ட போலிஸ் அதிகாரி நோர் ஒமார் சாப்பி கூறினார்.
அந்த லாரி ஓட்டுநரை போலிஸ் அதிகாரி தனது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றார்.
சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை துரத்திச் சென்ற போலிஸ் அதிகாரி, சிட்டியாவான் பகுதியில் லாரி ஓட்டுநரை மடக்கிப் பிடித்தார்.
அதனைக் கண்ட லாரி ஓட்டுநர் ஒரு வெட்டுக்கத்தியை எடுத்து போலிஸ் அதிகாரியை மிரட்டினார். ஆனால், லாரி ஓட்டுநரைச் சமாளித்த போலிஸ் அதிகாரி, பின்னர் அந்த ஓட்டுநரைக் கைது செய்தார் என்று திரு நோர் ஒமார் கூறினார்.
லாரி ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா என்பதைக் கண்டுபிடிக்க அவரது சிறுநீர் சோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
லாரி ஓட்டுநர் இரண்டு நாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity