முக்கியச் சேவைகளுக்கான கூடுதல் பணித்தொகை தொடர்பான சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையைத் திரும்பப் பெற மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது இணங்கியுள்ளதாக அந்நாட்டின் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் சயீது சாடிக் சயீது அப்துல் ரஹ்மான் டுவிட்டரில் நேற்று பதிவு செய்தார்.
அடுத்த மாதம் அமைச்சரவை கூடும்போது இதுகுறித்து கலந்துரையாடப்படும் என்றார் அமைச்சர் சயீது சாடிக்.
கூடுதல் பணித்தொகை சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவது குறித்து டாக்டர் மகாதீரிடம் தாம் பேசியதாக அமைச்சர் சயீது சாடிக் தெரிவித்தார்.
“இளையர்களின் கருத்துகளை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்,” என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அடுத்த ஆண்டிலிருந்து மருத்துவ அதிகாரிகள், மருந்தகர்கள், பல்மருத்துவர்கள், தாதிகள், பொறியாளர்கள், கடற்துறை அதிகாரிகள், கட்டடக்கலைஞர்கள் உட்பட 33 அரசாங்கப் பணிகளில் சேருபவர்களுக்கு முக்கியச் சேவைக்கான கூடுதல் பணித் தொகை வழங்குவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளும் என இம்மாதம் 20ஆம் தேதியன்று மலேசிய பொதுச் சேவைத் துறை அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டது.
இந்தச் சுற்றறிக்கைக்கு அமைச்சர் சயீது சாடிக் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஏற்கெனவே பணியில் இருப்போரை இந்தப் புதிய விதிமுறை பாதிக்காது. அவர்கள் தொடர்ந்து கூடுதல் பணித்தொகையைப் பெறுவர்.
அரசாங்க ஊழியர்களின் கூடுதல் பணித்தொகையை நிறுத்து
வதற்குப் பதிலாக அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் பணித்தொகை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மூவார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் சயீது சாடிக் தெரிவித்தார்.
தமக்கு வழங்கப்படும் வருடாந்திர விடுப்பைக் குறைத்துக்கொள்ளப்போவதாக அவர் கூறினார். தமக்குக் கிடைத்த விடுமுறை பணித்தொகையைத் திருப்பிக் கொடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, அரசாங்கத்தைச் சாடுவதுபோல அமைச்சர் சயீது சாடிக் நாடகமாடுகிறார் என மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் டாக்டர் வீ கா சியோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த விவகாரத்துக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தாரா என்று டாக்டர் வீ கேள்வி எழுப்பி உள்ளார்.