மலேசியர்கள், குறிப்பாக, பெரும்பான்மை மலாய்-முஸ்லிம் இனத்தவர் டாக்டர் மகாதீர் முகமது நாட்டின் பிரதமராக இருப்பதையே விரும்புகின்றனர் என்று கருத்தாய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. திரு அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவி வகிப்பதற்கு அவர்களது பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதை அந்த ஆய்வு காட்டுகிறது.
மலேசியாவின் ஆகப்பெரிய கருத்தாய்வு நிறுவனமான ‘மெர்டெக்கா சென்டர்’, மலேசியர்களிடம் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில் 42 விழுக்காட்டினர் 94 வயதான டாக்டர் மகாதீர் பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை ஆதரித்துள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே பிகேஆர் கட்சியின் தலைவரான திரு அன்வார் பிரதமராவதை ஆதரித்துள்ளனர்.
மொத்தமிருக்கும் 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 122ல் பெரும்பான்மை வகிக்கும் மலாய் இனத்தவரில் 58 விழுக்காட்டினர் டாக்டர் மகாதீர் பிரதமராக நீடிப்பதைத் தேர்ந்தெடுத்தனர். மாறாக, மலாய் இனத்தவரில்13 விழுக்காட்டினர் மட்டுமே திரு அன்வாரைத் தேர்ந்தெடுத்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்று டாக்டர் மகாதீர் பிரதமரான பிறகு மலாய் மக்களுக்கு ஆதரவான கொள்கைகள் அதிகரித்து வருவதால் அதிருப்தி அடைந்துள்ளனர் இந்திய, சீன இனத்தவர்கள். ஆய்வில் பங்கேற்ற இந்திய, சீன இனத்தவர்களில் முறையே 62, 58 விழுக்காட்டினர் திரு அன்வார் பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களில் முறையே 14, 20 விழுக்காட்டினர் மட்டுமே டாக்டர் மகாதீருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
“தலைமைத்துவ மாற்றத்தின் விளைவு, தன்மை, காலகட்டம் ஆகியவற்றில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்திருப்பதாக,” ஆய்வில் குறிப்பிட்டிருப்பதை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. இரு தலைவர்களுக்கும் இடையிலான சச்சரவு அதிகப்படியிஆன வதந்திகள், சந்தேகங்களுக்கு இடமளிப்பதாகவும் அறிக்கையில் தெரியவந்துள்ளாது.
திரு அன்வாரைவிட டாக்டர் மகாதீருக்கு ஆதரவு அதிகமாக உள்ளபோதும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி பதவி மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை மலேசியர்கள் விரும்புவதும் தெரியவந்துள்ளாது.
50 % மலேசியர்கள் இந்த மாற்றம் நிகழ்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 41 விழுக்காட்டினர் மட்டுமே, அடுத்த பொதுத் தேர்தல் வரை மாற்றம் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
டாக்டர் மகாதீர் பிரதமர் பதவியை திரு அன்வாருக்கு வழங்க ஆதரவு தெரிவித்தவர்களில் கால்வாசிப் பேர், அந்த மாற்றம் இவ்வாண்டு மே மாதத்துக்குள்ளாக செய்யபப்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆயினும், மலேசியாவில் ஏபெக் உச்சநிலை மாநாடு எதிர்வரும் நவம்பரில் முடியும்வரை தாம் பிரதமராக பதவி வகிக்க விரும்புவதாக திரு மகாதீர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity