மலேசியாவின் குவாந்தானைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் வந்த ஒரு கவர்ச்சியான “கடன் வேண்டுமா” என்னும் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அதில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.
கடன் பெறுவதற்கு அடையாள அட்டை, சம்பள விவரப்பட்டியல், வங்கிக் கணக்குப் பட்டியல், மின்சாரக் கட்டணக் கடிதம் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் நிர்வாணப் படமும் அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார் அந்தப் பெண்.
அவர்கள் கேட்ட அனைத்தையும் அந்த மாது அனுப்பி வைத்தார்.
பின்னர் கிறிஸ்துமஸ் நாளன்று அவருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், 5,000 ரிங்கிட் கடன் தருவதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டிருந்தது.
சில நிமிடங்களில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மிரட்டும் தொனியில் பேசிய ஓர் ஆடவர், உன்னுடன் தொடர்பில் இருக்கும் எங்கள் ஆளுக்கு உடனே பணத்தை மாற்றி விடு. இல்லையெனில் உனது நிர்வாணப்படத்தை இணையத்தில் பதிவேற்றுவோம் என்று மிரட்டினார்.
வேறு வழி தெரியாமல் அவர்களுக்கு அந்தப் பெண், 13 தடவை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் 17,985 ரிங்கிட் அனுப்பி வைத்தார்.
மேலும் 15,000 ரிங்கிட் கேட்டு அந்த மோசடிக் கும்பல் மிரட்டினர். பின்னர் சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண் கடந்த திங்கட்கிழமை போலிசில் புகார் அளித்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity