மலேசியாவின் செம்பனை எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு இந்திய நிறுவனங்கள் நிறுத்தியிருப்பதையடுத்து, மலேசியாவில் வாழும் சுமார் 150,000 இந்தியர்களை அவர்களது சொந்த நாட்டுக்கே அனுப்பும் சாத்தியம் குறித்து ஆராயலாம் என மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் தொடர்புகள் மற்றும் ஊடக ஆலோசகர் காதிர் ஜாசின் நேற்று முன்தினம் (ஜனவரி 13) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
“பல காலமாக இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு மலேசியா இடம்கொடுத்துள்ளது. சிலர் தற்காலிகமாகத் தங்கியிருந்தாலும் பலர் இங்கேயே தங்கி குடியுரிமையும் பெற்றுள்ளனர்,” என்று திரு ஜாசின் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் சுமார் 150,000 இந்திய நாட்டவர், ஊழியர்கள் இருப்பதாக மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் குறிப்பிடுகிறது.
இந்தியா ஆண்டுக்கு 9 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பனை எண்ணெய்யை மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது.
காஷ்மீர் தொடர்பிலான இந்தியாவின் நடவடிக்கைகள், இந்தியாவின் புதிய குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றைப் பற்றி டாக்டர் மகாதீர் குறிப்பிட்ட கருத்துகள் இந்திய அரசுக்கு ஏற்புடையதாக இல்லை.
இதற்கிடையே, இந்திய நிறுவனங்கள் மலேசியாவின் செம்பனை எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளன.
மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டாம் என இந்திய நிறுவனங்களை இந்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டாலும், அதன் தொடர்பில் ஆணை எதையும் இந்திய அரசு பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் பெரும்பான்மை நாடான பாகிஸ்தானின் ஒரு பகுதியான காஷ்மீருக்குள் இந்தியா ஊடுருவி ஆக்கிரமித்திருப்பதாக டாக்டர் மகாதீர் கடந்த ஆண்டு செப்டம்பரில் குறிப்பிட்டார்.
அதேபோல, இந்தியாவின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடந்த டிசம்பரில் அவர் கருத்துரைத்திருந்தார்.
மலேசிய பொருள்களை இறக்குமதி செய்வதன் தொடர்பில் இந்தியாவின் செயல்பாடுகள் அக்கறைக்குரியவை என்றாலும் தவறிழைக்கும்போது அதனை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவதும் அவசியம் என்று திரு மகாதீர் கருத்துரைத்துள்ளார். மேலும், காஷ்மீர், குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவை பற்றிய தமது நிலைப்பாட்டில் அவர் மாற்றம் ஏதும் தெரிவிக்கவில்லை.
#தமிழ்முரசு #பனை #மலேசியா #இந்தியா