கோலாலம்பூர்: மலேசியாவின் பொதுத்துறை நிறுவனமான ‘ப்ளஸ்’ நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்வதில் அரசுக்கு விருப்பமில்லை என்று அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது நேற்று தெரிவித்தார்.
இந்த நிறுவனம் பெருவிரைவுச் சாலைக் கட்டுமானம், பராமரிப்பு, சாலைக்கட்டணங்களை வசூலிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மலேசியாவின் அரசு சார்ந்த பொறியியல் மற்றும் கட்டுமான, நகர சீரமைப்பு, நிலமேம்பாடு, பெருவிரைவுப் போக்குவரத்து, சொத்து மேலாண்மை போன்றவற்றை கவனித்து வரும் யூஇஎம் குழுமம். இந்தக் குழுமத்தில் உறுப்பியம் பெற்ற ‘ப்ளஸ்’ நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டுவருவதாகவும் அதனை தனியாரிடம் விற்றுவிட வேண்டும் என்று முன்னதாகப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மகாதீர், ப்ளஸ் நிறுவனத்தை யாரிடமும் விற்கக்கூடாது என்று முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். இதுவே சிறந்த முடிவு என்றும் அவர் கூறினார். அத்துடன் மலேசிய அரசின் நிதியைக் கையாளும் தேசிய நிதி ஆணையம் ‘கஸானா நேசனல்’ மற்றும் மலேசிய ஊழியர் சேமநிதிக் கழகம் ஆகிய அமைப்புகளுடன் சேர்த்து வைத்துக்கொள்வதே சிறந்தது என்று டாக்டர் மகாதீர் கூறினார். பிளஸ் நிறுவனத்தின் பங்குகளில் தேசிய நிதி ஆணையம் 51 விழுக்காடும் ஊழியர் சேமநிதிக் கழகம் 49 விழுக்காடும் பெற்றுள்ளன. இந்நிலையில், பெருவிரைவுச் சாலைக் கட்டணச் சலுகை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். அத்துடன் பிளஸ் நிறுவனம் பெருவிரைவுச் சாலைக் கட்டணத்தை 18% விழுக்காடு குறைக்க வேண்டும் என்றும் டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.