பெட்டாலிங் ஜெயா: துவாஸ்-ஜோகூர் இரண்டாவது இணைப்பு உட்பட ‘ப்ளஸ் எக்ஸ்பிரஸ்வேஸ்’ பராமரிப்பின்கீழ் உள்ள மலேசிய நெடுஞ்சாலைகளில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சாலைக் கட்டணம் 18% குறைக்கப்பட உள்ளது.
அத்துடன், அடுத்த 38 ஆண்டுகளுக்கு அந்த நெடுஞ்சாலைகளில் சாலைக் கட்டணம் அதிகரிக்கப்படாது என்றும் பிரதமர் அலுவலகம் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்தது.
“அனைத்து ‘ப்ளஸ்’ நெடுஞ்சாலைகளிலும் சாலைக் கட்டணத்தை 18% குறைப்பது என இம்மாதம் 15ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ‘ப்ளஸ்’ பங்குதாரர்கள் ஒப்புதலின் அடிப்படையில் சாலைக் கட்டணம் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும்,” என்று அவ்வறிக்கை கூறியது.
தெற்கு ஜோகூரில் இருந்து வடக்கில் தாய்லாந்து எல்லை வரை செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையே மலேசியாவின் ஆக நீளமான சுங்கச் சாலை. அந்தச் சாலை உட்பட எட்டு நெடுஞ்சாலைகளை ‘ப்ளஸ்’ நிர்வகித்து வருகிறது.
பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, சாலைக் கட்டணங்கள் முழுவதுமாக அகற்றப் படும் வரை அந்தக் கட்டணக் குறைப்பு நடவடிக்கை படிப்படியாக இடம்பெறும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“எல்லா ‘ப்ளஸ்’ நெடுஞ்சாலைகளிலும் சாலைக் கட்டணச் சலுகை மேலும் 20 ஆண்டுகளுக்கு, அதாவது 2038ஆம் ஆண்டிலிருந்து 2058ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.