மலேசியாவை ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அண்மைய இடைத் தேர்தல்களில் தோற்றிருந்தாலும், இந்தக் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பதைக் குறிக்காது என மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.
“பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி ஒரு முறை மட்டுமே ஆளும் அரசாங்கமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என்று லங்காவியில் செய்தியாளர்களிடம் இன்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியைப் பிடிக்காது என்று பொருள்படும் கருத்தை திரு மகாதீர் குறிப்பிட்டதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் தொடர்பில் பதிலளித்தபோது திரு மகாதீர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அடுத்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று டாக்டர் மகாதீர் எச்சரித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போதுவரை மலேசியாவில் நடைபெற்ற 10 இடைத் தேர்தல்களில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி 5ல் தோல்வியைத் தழுவியது.
கடந்த வார இறுதியில் கிமானிசில் நடந்த இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சியான வாரிசான் சாபா, தேசிய முன்னணியிடம் தோற்றுப்போனது.
சட்டவிரோதக் குடியேறிகள் குடியுரிமை பெற்றுவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளூர் மக்களுக்கு ஏற்பட்டதும் அது தொடர்பாக ஆளும் கூட்டணி சரியான விளக்கம் அளிக்காததும் அண்மைய தோல்விக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதற்கு முந்தைய அரசாங்கங்களைக் காட்டிலும் தற்போதைய அரசுக்கு சிரமமான பணிகள் இருப்பதாகக் கூறிய டாக்டர் மகாதீர், “சீர்படுத்தும்,” பணியும் இருப்பதாகக் கூறினார்.
நிர்வாகத்தைச் சீர்படுத்தி, நிதி ஆதாரத்தைக் கண்டறிந்து, கடன்களை அடைப்பது என பல பணிகள் இருப்பதாகக் கூறிய திரு மகாதீர், “பக்கத்தான் ஹரப்பான் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதிலும் சிறப்பாக இல்லை என்று இப்போது தெரிகிறது,” என்றார்.
பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் மீதான அதிகரித்துவரும் விமர்சனங்கள் மக்களிடையேயான ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன என்று கூறிய டாக்டர் மகாதீர், வாக்காளர்களைக் கவர்வது கடினம் என்றார்.
திருடனின் கையைப் பிடித்து முத்தமிட்டு, ‘முதலாளி’ என்று மக்கள் அழைக்கும் நிலையை அடைந்துவிட்டதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கைக் குறிப்பிட்டு டாக்டர் மகாதீர் பேசினார்.
2018ஆம் ஆண்டு தேர்தல்களுக்குப் பிறகு ‘முதலாளி’ என்று முன்னாள் பிரதமர் நஜிப்பை அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
“‘முதலாளி’ பணத்தைத் திருடினால் மக்கள் அதனைத் தவறாக எடுத்துக்கொள்வதில்லை போலிருக்கிறது. ஏமாற்றியது மற்றும் பணத்தைத் திருடியதற்காக வழக்கை எதிர்நோக்கும் ஒருவரால் மக்கள் கவரப்படுவது எப்படி என்பது புரியவில்லை,” என்றும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
“அவர் மீண்டும் அரசாங்கத்துக்குள் வருவதை மக்கள் விரும்பினால் 15வது பொதுத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்கட்டும். ஆனால், பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் தவறுகளைச் சரி செய்யும் என்று எதிர்பார்க்க வேண்டாம்,” என்று அவர் கூறினார்.
#தமிழ்முரசு #மகாதீர் #மலேசியா #பக்கத்தான்ஹரப்பான் #நஜிப்