லங்காவி: மலேசியாவிலிருந்து வரும் செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா கடுமையான கட்டுபாடுகளை விதித்துள்ளதற்கு மலேசியா பதிலடி ஏதும் கொடுக்கப்போவதில்லை என அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் விவகாரம் குறித்து டாக்டர் மகாதீர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மலேசியவிலிருந்து இறக்குமதியாகும் செம்பனை எண்ணெய்க்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இவ்விரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாக பிளவு ஏற்பட்டுள்ள வேளையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் நேற்று பேசிய டாக்டர் மகாதீர், “பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் சிறிய நாடு. இந்த விவகாரத்தை எதிர்கொள்ள சில வழிகளைக் கண்டறிய வேண்டும்,” என தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மலேசியாவின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் சந்தையாக இந்தியா உள்ளது. உலகளவில் இந்தோனீசியாவிற்கு பிறகு செம்பனை எண்ணெய் உற்பத்தி செய்யும் இரண்டாவது நாடாக மலேசியா விளங்குகிறது.
இந்தியாவின் செம்பனை எண்ணெய் இறக்குமதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேவையை இந்தோனீசியா பூர்த்திசெய்து வந்தது. ஆனால், மலேசியாவின் குறைவான வரிகளால் கடந்த ஆண்டு இந்தோனீசியாவைவிட அதிக அளவிலான செம்பனை எண்ணெய்யை மலேசியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்தது.
இதற்கிடையே, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் உலகப் பொருளியல் மன்றக் கூட்டத்தில் இந்தியாவின் பியூஷ் கோயல், மலேசியாவின் அனைத்துலக வர்த்தக, தொழிற்துறை அமைச்சரைச் சந்திக்க மாட்டார் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.