லங்காவி: கடுமையான நிதிப் பிரச்சினைகளால் சிக்கியுள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க, ஐந்து பரிந்துரைகள் கிடைத்திருப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். எனினும், அவற்றுள் சில பரிந்துரைகள் பயனற்றவை என்றார் அவர்.
அனைத்துத் தரப்பையும் கலந்து ஆலோசித்து, இதற்குச் சிறந்த தீர்வு என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் என்று அவர் நேற்று கூறினார்.
2014ஆம் ஆண்டில் மலேசிய ஏர்லைன்சின் எம்எச்370 பயணிகள் விமானம் மர்மமான முறையில் காணாமல் போனது. அதே ஆண்டில் எம்எச்17 பயணிகள் விமானம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ஏவுகணையால் தாக்கப்பட்டு அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
உலக கவனத்தை ஈர்த்த அவ்விரு சம்பவங்களுக்குப் பிறகு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு நிதிப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டது.
அந்தப் பிரச்சினைகளிலிருந்து அந்நிறுவனத்தை மீட்டெடுக்க மலேசிய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.