தனது இரண்டு வயது மகளைக் கொலை செய்ததாக 22 வயதுப் பெண் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நூருல் ஷமீரா மஸ்லான் எனும் ஒற்றைப் பெற்றோரான அந்த மலேசியப் பெண் அவரது ஒரே குழந்தையான நூர் ஷஹானா அப்துஸ் குத்துஸை கொல்ல வேண்டுமென்ற நோக்கில் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் இம்மாதம் 13ஆம் தேதி குழந்தை இறந்து போனது. குழந்தையின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு மருத்துவமனையின் சார்பில் போலிசில் புகார் அளிக்கப்பட்டது.
நூருல் ஷமீராவும் அவரது 33 வயதான ஆண் நண்பரும் ஜனவரி 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். தற்போது பிணையில் வெளிவந்திருக்கும் ஆண் நண்பர், வழக்கில் சாட்சியாகப் பங்கெடுப்பார் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
நூருல் ஷமீரா மீதான குற்றச்சாட்டு இன்று (ஜனவரி 22) நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதும் அதை தலையசைத்து அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.
நூருல் ஷமீரா இம்மாதம் 5 முதல் 11ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் காலை 11 முதல் நண்பகல் 12 மணிக்குட்பட்ட நேரத்தில் தாமன் கெம்பாஸ் இண்டாவில் அமைந்திருக்கும் ஜாலான் கெம்பாஸ் இண்டாவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் குழந்தைத் தாக்கிய குற்றச் செயலைப் புரிந்திருக்கக்கூடும் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 302ன் கீழ் நூருல் ஷமீரா மீது குற்றக் சாட்டப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
பிரேதப் பரிசோதனை முடிவுகள் போன்றவற்றின் தொடர்பிலான விசாரணை அடுத்த மாதம் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெறும்.
குழந்தையின் உடலிலிருந்த காயங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக, அந்தக் குழந்தையின் பாட்டி அஸ்லிண்டா முகமது சஹாட் மிகுந்த வருத்தம் தெரிவித்தார். 16 பேரப்பிள்ளைகளைக் கொண்ட அவர், நூர் ஷஹானா தன்னுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தன்னை ‘அம்மா’ என்றே அழைத்ததாகவும் கூறி வருந்தினார்.
#தமிழ்முரசு #மலேசியப்பெண் #மகளைக்கொன்றதாய்