இவை ஒரு புறம் இருக்க, மலேசியாவுக்கு சீன சுற்றுப்பயணிகள் பலர் வருவதால் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவது சாத்தியமல்ல என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
“சில சமயங்களில் சீனாவி
லிருந்து வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தொடுகிறது. அவர்கள் அனைவரையும் கொண்டுபோய் எங்கு வைப்பது?,” என்று சீன சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்குள் வருவதைத் தடுப்பது அல்லது உடனடியாகத் தனிமைப்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது டாக்டர் மகாதீர் பதிலளித்தார்.
வூஹான் கிருமித் தொற்றால் மலேசியாவில் நான்கு பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு அந்த நோய் தொற்றியிருப்பதாக கடந்த சனிக்கிழமையன்று மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது அறிவித்தார். இதையடுத்து, இன்னொருவருக்கும் அந்த நோய் தொற்றியிருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டது.
மலேசியாவில் வூஹான் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் மூன்று பேர் சீன நாட்டவர்கள்.
அவர்கள் மூவரும் சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாரு வழியாக மலேசியாவுக்குள் நுழைந்தனர். அவர்கள் வூஹான் கிருமித் தொற்றுக்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் 66 வயது ஆடவரின் மனைவி, இரண்டு பேரன்கள். பேரன்களின் வயது 11 மற்றும் 2.
நோயால் பாதிக்கப்பட்டுள்ள நான்காவது நபர் வூஹானைச் சேர்ந்த 40 வயது ஆடவர். கடந்த புதன்கிழமையன்று சிங்கப்பூரி
லிருந்து அவர் ஜோகூருக்குப் பேருந்து மூலம் பயணம் செய்தார். கடந்த வியாழக்கிழமையிலிருந்து அவர் காய்ச்சலால் அவதியுற்றதாகவும் ஜோகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்றதாகவும் மலேசிய சுகாதார அமைச்சு கூறியது.
இந்நிலையில், மலேசியாவுக்கு வந்திருந்த சீன சுற்றுப்பயணிகளின் 2 வயது குழந்தைக்கு வூஹான் கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து, தனிமைப்படுத்தப்படுவதற்குள் தப்பிச் செல்ல முயன்ற அந்த மூவரையும் மலேசிய அதிகாரிகள் சினாய் அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைத்தனர்.
அவர்கள் மூவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஜோகூர் போலிஸ் படைத் தலைவர் முகம்மது கமாருதீன் முகம்மது தீன் தெரிவித்தார்.