மலேசியாவில் தைப்பூசம் வெகு விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தைப்பூசம் அடுத்த மாதம் (பிப்ரவரி) எட்டாம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், கிருமித் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பெரும் கூட்டங்கள் நடத்துவதை அரசாங்கம் கட்டுப்படுத்தக்கூடும் என்று மலேசிய செய்தி இணையப்பக்கமான ‘தமிழர்ஊடகம்’ குறிப்பிட்டுள்ளது.
தைப்பூசம் போன்ற லட்சக்கணக்கானோர் கூடும் விழாக்களை ரத்து செய்வது குறித்த முடிவு, உலக சுகாதார நிறுவனம் வெளியிடும் தகவல்களைப் பொறுத்து அமையும் என்று மலேசியாவின் துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளார்.
சீனாவின் வூஹானிலிருந்து பரவும் கொரோனா கிருமித் தொற்று, சிங்கப்பூர், மலேசியா உட்பட பல்வேறு நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
இன்று (ஜனவரி 30) மலேசியாவில் மேலும் ஒருவருக்கு இந்த கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், “கிருமித் தொற்றின் நிலவரம் என்ன என்பதைப் பார்த்து முடிவு செய்யலாம்,” என்றார் அவர்.
தைப்பூசக் கொண்டாட்டங்களின்போது மலேசியாவின் பத்து மலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலத்தில் பெருந்திரளாக மக்கள் கூடுவது வழக்கம்.
மலேசியர்கள் மட்டுமின்றி அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுப்பயணிகளும் அந்தக் காலகட்டத்தில் அங்கு செல்வர். கடந்த ஆண்டு தைப்பூசத்தின்போது சுமார் 1.6 மில்லியன் மக்கள் அங்கு கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இத்தகைய கூட்டங்களை உலக சுகாதார நிறுவனம் நடத்த வேண்டாமென்று கூறினால் அதன் தொடர்பில் தகவல் வெளியிடுவோம்,” என்று திருவாட்டி வான் அஸிஸா கூறியதாக 'தமிழர்ஊடகம்' குறிப்பிட்டது.
விளையாட்டு நிகழ்ச்சிகள், சமயம் சார்ந்த புனிதயாத்திரைகள் போன்ற பெருங் கூட்ட நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு சுகாதார அச்சுறுத்தலாக விளங்கக்கூடும் என்றும் அந்தக் கூட்டங்கள் நடைபெறும் நாடு அல்லது நகரத்தின் பொதுச் சுகாதார மூலங்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.
இதற்கிடையே, ஹுபெய் மாகாணத்தின் வூஹானில் இருக்கும் 78 மலேசியர்களை அங்கிருந்து வெளியேற்றி மலேசியாவுக்குக் கொண்டு வருவதன் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக மலேசிய பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது இன்று காலை தெரிவித்தார்.
அவ்வாறு 78 பேரும் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என வான் அஸிஸா குறிப்பிட்டார்.
வேகமாகப் பரவி வரும் வூஹான் கிருமித்தொற்றுக் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உலக நாடுகளை எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
இந்தக் கிருமித் தொற்றின் தொடர்பில் அனைத்துலக அளவில் அவசர நிலையை அறிவிப்பது தொடர்பான அவசரக் கூட்டத்துக்கு நிறுவனம் இன்று ஏற்பாடு செய்துள்ளது.
#மலேசியாதைப்பூசம் #தமிழ்முரசு #வூஹான்கிருமித்தொற்று