பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதின் தலைமைத்துவத்திற்கு முழுமையாக ஆதரவளிப்பதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மகாதீருக்கு ஆதரவு நல்க முற்படுவதாகக் கூறப்படுவதில் அர்த்தமில்லை என்றார் அவர்.
“டாக்டர் மகாதீருக்கு ஆதரவு அளிப்பதில் என்ன கூத்து நடக்கிறது என்று துணைப் பிரதமர் வான் அஸிஸா நேற்றுதான் (பிப்ரவரி 12) கேட்டார்.
“நாட்டின் ஏழாவது பிரதமராக டாக்டர் மகாதீருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதில் எங்களது கடப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை,” என்று திரு அன்வார் கூறினார்.
டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், போர்ட் டிக்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு அன்வாரின் மனைவி.
டாக்டர் மகாதீருக்கு ஆதரவு தெரிவிக்க, எதிர்க்கட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட ரீதியான தீர்மானத்தில் கையெழுத்திட வைப்பதில் ஒரு சில கட்சிகள் முற்படுவது குறித்து தாமும் கேள்விப்பட்டிருப்பதாக திரு அன்வார் சொன்னார்.
“இதைச் செய்வதற்குப் பதிலாக, நாம் பொருளியலில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் அதைச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். மாறாக, அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டு அரசாங்கத்தை நாம் திசைதிருப்பக்கூடாது,” என்றார் அவர்.
எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு எந்தவோர் அரசாங்கமும் அடிபணியக்கூடாது என்றார் அவர்.
இதற்கிடையே, வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில், பிரதமர் பொறுப்பு மாற்றம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
மேலும், தாம் பிரதமராக நீடிப்பதற்கு டாக்டர் மகாதீர் ஆதரவு திரட்டுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று பிரதமரே தம்மிடம் கூறியதாகவும் திரு அன்வார் தெரிவித்தார்.
#தமிழ்முரசு #மலேசியா #அன்வார் #மகாதீர் #பிரதமர்