மலேசியாவில் மேலும் இருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு இன்று (பிப்ரவரி 15) தெரிவித்தது.
புதிதாக கிருமிதொற்று உறுதிசெய்யப்பட்ட இருவரும் சீன நாட்டவர். அவர்களில் ஒருவர் 27 வயதான ஆடவர் என்றும் மற்றவர் 32 வயதான பெண் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் குவாங்ஸு பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான அந்த ஆடவர், நேற்று புக்கிட் காயு ஹிதாம் குடிநுழைவு வழியாக மலேசியாவுக்குள் நுழையும்போதே அவருக்கு உடல் நலக்குறைவு இருந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் கெடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த 32 வயது பெண்மணி மலேசியாவில் வசிப்பவர். ஆனால், அவர் கடந்த மாதம் 22 முதல் 30ஆம் தேதி வரை குடும்பத்தாரைப் பார்க்க சீனாவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பிய அவருக்கு கிருமித்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
கிருமித்தொற்று கண்ட 21 பேரில் 15 பேர் சீன நாட்டவர்; 6 பேர் மலேசியர்கள். அதில் 7 சீன நாட்டவர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர்.
இதற்கிடையே, ஹுபெய் மாகாணத்தில் சிக்கித் தவிக்கும் தமது குடிமக்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பணிகளில் மலேசியா இறங்கியுள்ளது. சுமார் 100 மலேசியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் இந்த இரண்டாவது விமானத்தில் மலேசியாவுக்கு அழைத்துவரப்படுவர் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
#தமிழ்முரசு #கொரோனா #மலேசியா
.