வரத்தகர் ஒருவரை மிரட்டி அவரிடமிருந்து 3 மில்லியன் ரிங்கிட் ($1 மில்லியன்) பறித்தாகக் கூறப்படும் நான்கு போலிஸ் அதிகாரிகளைக் கைது செய்துள்ளதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் அப்துல் ஹமீது பாடோர் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூருக்கு அருகில் உள்ள செராஸ் வட்டாரத்தில் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இருப்பதைக் கண்டும் காணாமல் இருக்க அந்த வர்த்தகரிடம் அந்த போலிஸ் அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
போலிஸ் அதிகாரிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திரு அப்துல் ஹமீது.
37, 38 வயதுகளில் இருக்கும் அந்த நான்கு போலிசாரும் சுமார் 12 ஆண்டுகள் போலிஸ் துறையில் பணியாற்றியவர்கள் என்று கூறப்பட்டது. அவர்களில் ஒருவர் இன்ஸ்பெக்டர், இருவர் துப்பறியும் காப்பொரல்கள், மற்றொருவர் கடுமையான குற்றங்களைக் கையாளும் சிலாங்கூர் குற்றவியல் விசாரணைத் துறையில் பணிபுரியும் கார்ப்பொரல் என்று 'மலேய் மெயில்' செய்தி வெளியிட்டது. அவர்கள் நால்வரும் ஷா அலாமில் உள்ள சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தில் நேற்று (பிப்ரவரி 18) காலை 9.45 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
அந்த போலிஸ் அதிகாரிகள் பெற்றுக்கொண்ட 3 மில்லியன் ரிங்கிட் தொகை இன்னும் மீட்கப்படவில்லை என்று திரு அப்துல் ஹமீது கூறினார்.
#மலேசியா #போலிசார் #மிரட்டி பணம் பறிப்பு #தமிழ்முரசு