புத்ராஜெயா: MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 2014ஆம் ஆண்டில் 239 பேருடன் காணாமல் போனது. அந்த விமானத்தின் விமானி தற்கொலை செய்துகொண்டது மட்டுமல்லாது விமானத்தில் இருந்த அனைவரின் மரணத்துக்கும் காரணமாக இருந்ததாக மலேசியாவின் அப்போதைய அரசாங்கம் கூறியது.
அப்போது மலேசியாவின் பிரதமராக நஜிப் ரசாக் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், MH370 காணாமல் போனது தொடர்பாக ஸ்காய் நியூஸ் விளக்கப்படம் ஒன்றை நேற்றும் இன்றும் இரு பாகங்களாக வெளியிடுகிறது. அதில் விமானம் காணாமல் போனது தொடர்பான புதிய தகவல்கள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
விமானம் காணாமல் போனவுடன் விமானி தற்கொலை செய்து மற்றவர்களின் மரணத்துக்குக் காரணமாகயிருந்ததாக விசாரணை தொடங்குவதற்கு முன்பே அப்போதைய மலேசிய அரசாங்கம் கூறியதை ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபட் விளக்கப்படத்தில் கூறியுள்ளதாக மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் மூத்த உறுப்பினரும் ஆலோசகருமான லிம் கிட் சியாங் தெரிவித்தார். இதுகுறித்து அம்னோ தலைமையிலான அப்போதைய மலேசிய அரசாங்கத்தின் உயர்நிலை தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திரு லிம் கூறியுள்ளார். இதற்கிடையே, விமானம் காணாமல் போனதற்கு விமானிதான் காரணம் என்பதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று நஜிப் நேற்று தெரிவித்தார்.