ஜோகூரைச் சேர்ந்த இளையருக்கு மலேசியாவின் ‘பிக் ஸ்வீப்’ அதிர்ஷ்டக் குலுக்கில் 3.5 மில்லியன் மலேசிய ரிங்கிட் பரிசு கிடைத்துள்ளது.
இந்தச் செய்தியை பான் மலேசியன் ஸ்வீப்ஸ் நிறுவனத்தின் அறிக்கை இன்று (பிப்ரவரி 28) தெரிவித்தது.
30களில் இருக்கும் அந்த ஆடவர் வாங்கிய 50 சீட்டுகளில் ஒன்றுக்கு முதல் பரிசு விழுந்திருக்கிறது. அத்துடன் அவருடைய சீட்டின் இறுதியில் 7 என்ற எண் இருந்ததால் அவருக்கு ஜாக்பாட் பரிசுத்தொகையும் கிடைத்துள்ளது.
அவர் அந்தப் பரிசுச் சீட்டுகளை தாமன் பிலாங்கி ஜோகூர் பாருவில் வாங்கியதாகச் சொல்லப்பட்டது.
தைப்பூச தினத்தன்று நிறுவனம் அளித்த இரவு விருந்து ஒன்றில் பங்கேற்றபோது அந்தப் பரிசுச் சீட்டுகளை அவர் வாங்கினார்.
“அந்த விருந்தில் நடத்தப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கில் இளையருக்கு 500 ரிங்கிட் அங் போ கிடைத்தது. அதனையடுத்து, அதிர்ஷ்டக் குலுக்கு சீட்டு விற்பனையாளர் அவரை அணுகியதில் அவர் 50 சீட்டுகளை வாங்கினார்,” என்று கூறப்பட்டது.
அவர் வாங்கிய சீட்டுகளில் ஒன்றுக்கு முதல் பரிசாக 3 மில்லியன் மலேசிய ரிங்கிட்டும் ஜாக்பாட் பரிசாக 500,000 ரிங்கிட்டும் கிடைத்தன.
அத்துடன் அவர் வாங்கிய மற்ற 49 சீட்டுகளிலும் முதல் நான்கு எண்கள் முதல் பரிசு பெற்ற சீட்டின் முதல் நான்கு எண்களுடன் ஒத்திருந்ததால் அவருக்கு மொத்தம் 4,900 ரிங்கிட் கூடுதலாகக் கிடைத்தது.
#மலேசியா #பிக்ஸ்வீப் #50 சீட்டுகளுக்கும் பரிசு