ஜோகூரில் உள்ள பெங்கெராங் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று (மார்ச் 15) இரவு வெடிப்பு ஏற்பட்டு தீ மூண்டதில் ஐவர் மாண்டனர்.
பெட்ரோனாஸ்-சவூதி அராம்கோ கூட்டு ஒத்துழைப்பில் செயல்படும் தொழிற்சாலையில் தீ மூண்டது. உடனே அவசரகாலக் குழு செயலில் இறங்கியது என்று பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இன்று காலை 11.15 மணி வரை மீட்பு நடவடிக்கை நீடித்தது என்று ஜோகூர் மாநில தீயணைப்புத் துறையின் தளபதி அப்துல் ரஹ்மான் அஸெஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
“விபத்தில் ஏழு பேர் சிக்கினர், ஒருவர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார். மற்றொருவருக்கு 70 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது. நால்வர் இறந்துவிட்டனர். ஒருவரைக் காணவில்லை,” என்றார் அவர்.
பின்னர் காணாமல் போனவரும் இறந்துவிட்டதாக அவர் அறிவித்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக அவர் கூறினார். இதற்கிடையே, ஜோகூர் சுல்தான் இப்ராஹிம், விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
அவரது இரங்கல் செய்தி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஒரு வருட காலத்திற்குள் பெங்கெராங் ஒருங்கிணைக்கப்பட்ட வளாகத்தில் இரண்டாவது முறையாக தீ விபத்து நிகழ்ந்தது.