சிங்கப்பூர் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் மலேசியர்கள் தொடர்ந்து இங்கு வேலை செய்யலாம் என்று வெளியுறவு அமைச்சு இன்று (மார்ச் 20) தெரிவித்தது.
இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் தங்கும் வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
மலேசியாவில் புதன்கிழமை (மார்ச் 18) முதல் நடப்புக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் டியோ சீ ஹியன், மலேசியாவின் மூத்த அமைச்சர் மற்றும் தற்காப்பு அமைச்சரான இஸ்மைல் சப்ரி யாக்கோப்புடன் தொலைபேசியில் பேசியதாக வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறியது.
இரு நாட்டு மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படாத அதே வேளையில் நிறுவனங்கள், ஊழியர்கள், குடிமக்கள் ஆகிய மூன்று குழுக்களுக்கும் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதை இரு அமைச்சர்களும் உறுதிப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
#சிங்கப்பூர் #மலேசியா