கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘ரெம்டெசிவிர்’ என்ற மருந்தின் செயல்திறனைச் சோதித்துப் பார்க்க உலகச் சுகாதார நிறுவனம் முடிவுசெய்துள்ளது. அந்தப் பரிசோதனை முயற்சிகள் இடம்பெறும் நாடுகளில் ஒன்றாக மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்து இருக்கிறது.
மலேசிய சுகாதார அமைச்சு அந்த ஆய்வை மேற்கொள்ளும் திறன்பெற்றிருப்பதால் அந்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மன்றம் குறிப்பிட்டது.
‘ரெம்டெசிவிர்’ மருந்தை கொரோனா கிருமி தொற்றியுள்ளோருக்குக் கொடுத்து, அதன் செயல்திறனையும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் சுகாதார அமைச்சு கண்காணிக்கும் என்று சுகாதாரத் தலைமைச் செயலாளர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியிருக்கிறார்.
புதிய கொரோனா கிருமித்தொற்றை எந்த மருந்தேனும் குணப்படுத்துமா என்பதைக் கண்டறிவதற்காக ‘ஒற்றுமைச் சோதனை’ என அழைக்கப்படும் பேரளவிலான சோதனை முயற்சியை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதாகத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் நூர் பதிவிட்டுள்ளார்.
பல நாடுகளைச் சேர்ந்த, பல ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அம்மருந்தைக் கொடுத்து, சோதித்துப் பார்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் இணையலாம்
இதனிடையே, கொரோனா தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளைத் துரிதப்படுத்தவுள்ள இந்த ‘ஒற்றுமைச் சோதனை’ முயற்சியில் இந்தியா இணையக் கூடும் என்று இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தின் நோய்த்தொற்றியல் பிரிவுத் தலைவர் டாக்டர் ஆர்.கங்கா கேத்கர் கூறியுள்ளார்.
இந்த ‘ஒற்றுமைச் சோதனை’ மூலம் நம்பிக்கை அளிக்கக்கூடிய நான்கு முக்கிய மருந்துகளில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள வைரஸ் எதிர்ப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர்’, மலேரியாவைக் குணப்படுத்த வழங்கப்படும் குளோரோகுவின் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுவின், எச்ஐவி தொற்றுக்குத் தரப்படும் லோபினவிர் மற்றும் ரிட்டோனவிர் மருந்துகளின் கலவை, எச்ஐவி மருந்துகளுடன் இன்டர்ஃபெரோன் பீட்டா சேர்ந்த கலவை ஆகிய நான்கு வெவ்வேறு மருந்துகளை அல்லது மருந்துக் கலவைகளை கொரோனா கிருமி தொற்றியோருக்குக் கொடுத்துச் சோதித்துப் பார்க்கப்படவுள்ளன.