மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த பிறக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தளர்த்தப்பட்ட பிறகு மக்கள் வழக்கமான வாழ்க்கைமுறைக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணுவர். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது என்று முன்னாள் சுகாதார தலைமை இயக்குநர் இஸ்மாயில் மரைக்கான் கூறியுள்ளார்.
நாட்டில் கிருமிப் பரவல் நிலவரம் கட்டுக்குள் வந்தாலும் அனைவரும் தொடர்ந்து பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். ஆண்டுதோறும் புனித ரமலான் மாதத்தில் நடைபெறும் நோன்பு சந்தைகள், திருமணங்கள் உள்ளிட்ட கூட்டம் கூடும் இடங்களைக் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தவிர்க்க வேண்டும் என டாக்டர் இஸ்மாயில் சொன்னார்.
“இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கை எப்போதும்போல இருக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முன்னெச்ச்சரிக்கை நடவடிக்கைகளை நமது நாட்டில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டாலொழிய வெளியே செல்ல வேண்டாம்,” என்றார் அவர்.
ஏப்ரல் 14ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்த பிறகு ரமலான் சந்தைகளை நடத்துவதற்கு ஒப்புதல் அளிப்பதா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் அன்வார் மூசா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
அவரது அறிவிப்புக்கு மலேசியர்கள் சமூக ஊடகத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மக்கள் பெருமளவில் கூடும் ரமலான் சந்தைகளில் கிருமிப் பரவினால் நாட்டில் கிருமித்தொற்று அலை மீண்டும் எழும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்பட்டபின் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பது குறித்த விளக்கத்தை வெளியிடும் முயற்சியில் சுகாதார அமைச்சு ஈடுபட வேண்டும் என டாக்டர் இஸ்மாயில் கூறினார்.
#மலேசியா #கொவிட்-19