சிங்கப்பூரில் தங்கியிருக்கும் மலே சியர்களுக்கு வீட்டுக்கவலை ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமை பற்றியும் கவலை தெரிவித்துள்ளனர்.
மலேசிய அரசாங்கம் அந்நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மார்ச் மாதம் 18ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 31ஆம் தேதி முடிப்பதாக இருந்தது. பின்னர் அது இம்மாதம் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஒருவேளை, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்பட்டால் பணத் தேவைக்கு என்ன செய்வது என்பதே மலேசியர்களின் பெருங்கவலையாக உள்ளது.
தங்கள் முதலாளிகள் தாங்கள் தங்க இடவசதி செய்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மலேசியர்கள், கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டால் செலவு இன்னும் அதிகமாகும் என்றும் கூறினர்.
உதவி ரசாயன நிபுணரான 25 வயது எடி மனோவா, மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைக்கு வந்ததிலிருந்து தமது நிறுவனம் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்த வாடகை அறையில் தங்கியுள்ளார்.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டால் தங்கும் அறைக்கான வாடகையை நானே செலுத்த வேண்டியிருக்கும். எனது நிறுவனம் வாடகைக் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் நான் என் சொந்த பணத்தைச் செலுத்தி சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்துள்ளேன். காரணம், சம்பளமில்லா விடுப்பை எடுக்க என்னால் இயலாது,” என்றார்.
துணைப் போலிஸ் படை அதிகாரியாக பணியாற்றும் திரு வோங், “தற்போது சிங்கப்பூரில் தங்க என் முதலாளி ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், எதிர்காலத்தில், ஊழியர்கள் தங்குவதற்கு எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் ஐந்து குறைந்த கட்டண ஹோட்டல்களில் தங்க ஒரு நாளைக்கு $15 வரை நாங்கள் வாடகை செலுத்த வேண்டியிருக்கும் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது,” என்றார்.
“அப்படி என்றால் இரண்டு வாரங்களுக்கு நாங்கள் $210 செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கூடுதல் செலவை ஈடுகட்டுவது சிரமாக இருக்கும்,” என்றும் திரு வோங் தமது கவலையைத் தெரிவித்தார்.
#சிங்கப்பூர் #மலேசியர்