சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த மலேசிய கர்ப்பிணிகள் 70 பேர், 10 குழந்தைகள், உடற்குறையுடயோர் போன்றவர்கள் ஜோகூர் காஸ்வே இணைப்புப் பாலம் வழியாக தாயகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிங்கப்பூரில் இருக்கும் மலேசிய தூதரகத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
“இரண்டு பேருந்துகளில் அவர்கள் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அதற்கு முன்பு அவர்கள் அனைவரும் கிராஞ்சி எம்ஆர்டி நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் குழுமினர்,” என சிங்கப்பூருக்கான மலேசியாவின் துணைத் தூதர் முகமது ராட்ஸி ஜமாலுதீன் கூறினார்.
அந்தப் பெண்களில் சிலர் நிறைமாத கர்ப்பிணிகளாக இருந்ததால் இந்தக் குழுவுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டது என்று திரு முகமது ராட்ஸி கூறினார்.
“இரு நாடுகளிலும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; அவை அடிக்கடி மாறி வருகின்றன. அதனால், இவர்கள் விரைவில் நாடு திரும்புவது நல்லது என்பதால் அவர்களுக்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று (ஏப்ரல் 3) முதல் மலேசியாவுக்குள் நுழைவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்று மார்ச் 31ஆம் தேதி மலேசிய அரசாங்கம் அறிவித்தது.
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருப்பதால், வாகனங்கள் இல்லாத மலேசியர்கள் சிலர் காஸ்வே வழியாக நடந்து மலேசியாவுக்குச் சென்றனர்.
#மலேசியா #சிங்கப்பூர் #கொவிட்-19