கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 40,000 பேர் கொண்ட சங்கிலியை மலேசிய போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்களில் தப்லிக் ஜமாத் குழுமமும் அடங்கும் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் இன்று (ஏப்ரல் 4) தெரிவித்தது.
கிடைத்த தரவுகளை குற்றவியல் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த பணிக் குழு ஆராய்ந்ததாக மலேசியப் போலிஸ் படைத் தலைவர் அப்துல் ஹமீது பாடோர் கூறினார்.
தரவுகளை சுகாதார அமைச்சு கொடுத்ததாக அவர் தெரிவித்தார். அதன் மூலம் கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டியவர்களை போலிசார் அடையாளம் கண்டிருப்பதாக அவர் கூறினார்.
“அண்மையில் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு ஏறத்தாழ 11,000 தப்லிக் ஜமாத் உறுப்பினர்களை அடையாளம் காண நாங்கள் சுகாதார அமைச்சுக்கு உதவியுள்ளோம்,” என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹமீது.
வெளிநாடுகளில் இருக்கும் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களைப் பற்றிய விவரங்களையும் சேகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். அவர்களைப் பற்றி விவரங்கள் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.
அவர்கள் மலேசியா திரும்பியதும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இது உதவும் என்று திரு ஹமீது கூறினார்.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த ஜோகூர் மாநிலம் எங்கும் 54 தனிமைப்படுத்தும் நிலையங்களை அம்மாநில அரசாங்கம் அமைத்துள்ளது.
"தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தும் இடங்களாக மாற்ற ஏதுவான மற்ற இடங்கள் அடையாளம் காணப்படும். ஹோட்டல்களும் தனியார் கட்டடங்களும் இவற்றில் அடங்கும்,” என்றார் ஜோகூர் மாநிலத்தின் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு வித்யானந்தன்.
இதற்கிடையே, இன்று உறுதி செய்யப்பட்ட 150 சம்பவங்களையும் சேர்த்து மலேசியாவில் மொத்தம் 3,483 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இன்று பதிவான புதிய நான்கு மரணங்களையும் சேர்த்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் நடப்பில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இம்மாதம் 10ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று சுகாதார அமைச்சின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்.