நாடு திரும்ப திட்டமிடும் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான நிபந்தனைகளை அது விதித்துள்ளது.
மலேசிய ஊழியர்கள் நாடு திரும்புவதற்கு முன்பு சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
தங்களுக்கு கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்யும் மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழை அவர்கள் பெற வேண்டும்.
இந்தச் சான்றிதழை அவர்கள் மலேசிய குடிநுழைவு அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் மலேசிய ஊழியர்கள் மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படுவர்.
“சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்படவில்லை என்றால் அவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். என்று மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கைரூல் ஸாமி தாவூத் ஜோகூர் குடிநுழைவுத் துறையிடம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக மலேசியாகினி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்தச் செய்தி உண்மையானதுதான் என்று திரு கைரூல் மலேசியாகினியிடம் உறுதி செய்துள்ளார். மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் இரண்டாம் கட்டத்தின்கீழ் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் மலேசியர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இரண்டு வாரங்களுக்கு இருக்க வேண்டும்.
#மலேசியா #கொவிட்-19