கோலாலம்பூர்: மலேசியாவில் அறிவிக்கப்பட்ட 28 நாள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் அதனை மேலும் நீட்டிக்கப் பலரும் விரும்புவதாகத் தெரிய வந்து உள்ளது.
இதுதொடர்பாக மலேசியாவின் தேசிய பாதுகாப்பு மன்றம் இணையம் மூலம் கருத்தாய்வு ஒன்றை நடத்தியது.
நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் நிலவரப்படி அந்த ஆய்வில் 386,000 பேர் பங்கேற்றனர்.
மலேசியாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மேலும் சில காலத்துக்கு நீட்டிக்க வேண்டும் என ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 88 விழுக்காட்டினர் கூறி உள்ளனர்.
இதற்கிடையே, ஆணையை வரும் 14ஆம் தேதிக்குப் பின்னரும் நீட்டிக்க மலேசியாவின் மருத்துவக் கல்விக்கழகமும் கோரிக்கை விடுத்துள்ளது.
“ஆணையின் விதிமுறைகளை அளவுக்குமீறி தளர்த்துவதாலும் முழுமையான பயனைப் பெறுமுன்னரே ஆணையைத் திரும்பப் பெறுவதாலும் கடந்த நான்கு வாரங்களாக சாதித்தவை வீணாகிவிடலாம்.
“கொவிட்-19க்கு எதிரான போரில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இதுவரை சாதித்ததோடு இவ்வாண்டில் நாம் இன்னும் பல தியாகங்களைச் செய்ய வேண்டி உள்ளது.
“மலேசியர்கள் ஒற்றுமையாக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் போரை முடிவுக்கருகில் கொண்டு வர இயலும் என்பதை நாம் உலகிற்கு உணர்த்துவோம்,” என்று கல்விக்கழகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மாநிலங்களுக்கு இடையிலான, அவசியமற்ற பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நோன்புப் பெருநாளுக்குப் பின்னரும் நீட்டிக்குமாறும் அது யோசனை கூறி உள்ளது.