பெர்சத்து கட்சியின் அவைத்தலைவராக தாமே நீடிப்பதாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது (படம்) தெரிவித்து இருக்கிறார்.
டாக்டர் மகாதீர், அவருடைய மகனும் கெடா மாநில முன்னாள் முதல்வருமான முக்ரிஸ் மகாதீர் உட்பட ஐவர் பெர்சத்து கட்சியில் நீக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், எவரும் எதிர்பாராதவிதமாக திரு மகாதீர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கட்சித் தலைமையகத்திற்கு நேற்றுப் பிற்பகலில் நேரில் சென்று வியப்பளித்தார்.
“நான் பெர்சத்து கட்சியின் அவைத்தலைவர். இது என்னுடைய அலுவலகம். கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இத்தனை நாட்களாக இந்த அலுவலகத்திற்கு வராமல் இருந்தேன்,” என்று செய்தியாளர்களிடம் டாக்டர் மகாதீர் கூறினார்.
மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினைக் கட்சியைவிட்டு நீக்குவதற்குத் தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
“அவரைக் கட்சியைவிட்டு நீக்க விரும்புகிறோம். அதற்காக கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்போம்,” என்றார் அவர்.
அமைப்புச் செயலாளர் முகம்மது சுஹைமி யஹ்யா, தலைமைச் செயலாளர் ஹம்சா ஸைனுதின் ஆகியோரது பதவி நியமனங்கள் உட்பட கட்சியில் பல தவறுகளை திரு முகைதீன் செய்திருப்பதாகவும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
“அமைப்புச் செயலாளரால் நான் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அமைப்புச் செயலாளர் என்றொரு பதவியே இல்லை. அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. வேண்டுமானால் மேசைகளை ஒழுங்குபடுத்தலாம். அதேபோல, திரு மர்ஸுகி யஹ்யாதான் இன்னும் கட்சியின் தலைமைச் செயலாளராக இருக்கிறார். இதுபற்றி எல்லாம் திரு முகைதீன் என்னுடன் ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், அவர் ஒருபோதும் அப்படிச் செய்ததில்லை,” என்றும் திரு மகாதீர் குற்றம் சாட்டினார்.
கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியபோது டாக்டர் மகாதீரும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்ததால் அவர்கள் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆயினும், தமக்கு விருப்பப்பட்ட இடத்தில் அமருவதை கட்சியின் சட்டதிட்டங்கள் தடுக்கவில்லை என டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
“நான் எங்கு வேண்டுமானாலும் அமர முடியும். அதைப் பற்றி கட்சியின் சட்ட திட்டங்களில் எதுவும் கூறப்படவில்லை. அப்படி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்ததால் நான் கட்சியைவிட்டு விலகிவிட்டதாகக் கருதக்கூடாது. கட்சியைவிட்டு நீக்க அதையெல்லாம் ஒரு காரணமாகச் சொல்லக்கூடாது,” என்றார் அவர்.
இந்நிலையில், கட்சியைவிட்டு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சங்கங்கள் பதிவாளருக்கும் பெர்சத்து அலுவலகத்திற்கும் டாக்டர் மகாதீர் கடிதம் அனுப்பி இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் ஹனிஃப் கத்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மகாதீரும் மற்ற நால்வரும் எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானுடன் இணைந்து திரு முகைதீனைப் பிரதமர் பதவியில் இருந்து அகற்ற முயற்சி மேற்கொண்டதாக பெர்சத்து தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுதின் நேற்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாக ‘தி ஸ்டார்’ செய்தி தெரிவிக்கிறது.