புத்ரஜெயா: மலேசியாவில் இருக்கும் சட்டவிரோத குடியேறிகள் அடுத்த வாரம் முதல் தங்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று கூறியுள்ளார் மலேசிய தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.
வரும் 6ஆம் தேதியன்று தொடங்கும் முதற்கட்ட நடவடிக்கையில் இந்தோனீசிய குடிமக்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இதுபற்றி விளக்கம் அளித்த இஸ்மாயில் சப்ரி யாக்கோப், “அனைத்து இந்தோனீசிய சட்டவிரோத குடியேறிகளும் தங்களது சொந்த நாடு திரும்புவதற்கு முன்னர், இந்தோனீசிய தூதரக அதிகாரிகள் முன்னிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
“முதற்கட்ட நடவடிக்கையில், தீபகற்ப மலேசியா மற்றும் சரவாக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2,189 பேரும் சாபாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 672 பேரும் திருப்பி அனுப்பப்படுவர்.
“இவர்களில் 450 பேர் விமானங்கள் மூலம் ஜகார்த்தா, மேடான், சுரபாயா ஆகிய நகரங்களுக்கு 6ஆம் தேதியன்று அனுப்பி வைக்கப்படுவர். அதன் பிறகு ஜூன் 10ஆம் தேதியன்று இதே இடங்களுக்கு மேலும் 445 பேர் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
“ஜூன் 22ஆம் தேதி முதல் 1,294 இந்தோனீசியர்கள் கடல்வழியாக மேடானுக்கு அனுப்பி வைக்கப்படுவர். “இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது மேலும் 2,623 பேர் திருப்பி அனுப்பப்படுவர். இரண்டாம் கட்ட நடவடிக்கை இரண்டு மாத காலத்திற்கு நீடிக்கும்,” என்றார்.
மேலும் நேப்பாளத்தைச் சேர்ந்த 246 பேரையும் மற்றும் பங்ளாதேஷைச் சேர்ந்த 2,476 பேரையும் அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைப்பது குறித்து அந்நாட்டு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதுபோல் கம்போடிய தூதரகமும் தங்களது நாட்டைச் சேர்ந்த 67 பேரைத் திரும்ப அழைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக மலேசியா கூறியுள்ளது.
“தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகளைத் திருப்பி அழைத்துக்கொள்ள மற்ற நாடுகளும் முன்வந்து ஒத்துழைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையை அடுத்து குடிநுழைவு தடுப்பு மையத்தில் 4,807 சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.